Monday, June 30, 2014

அகிலத்தில் பிறவி எடுத்ததின் நோக்கம்

அகிலத்தில் பிறவி எடுத்ததின் 
நோக்கம்

உலையில் வைத்த பாத்திரத்தில்
போடப்பட்ட ஆமை சிறிது நேரத்தில்
உயிர் போகப்போவதை அறியாது
உற்சாகமாய் சுற்றி சுற்றி வலம்
வருவதுபோல் இவ்வுலக மாந்தர்களும்
எந்த கணமும் மண்ணில் விழுந்துவிடும்
என்பதை அறியாது ஆசைகள் விரிக்கும்
வலையில்  சிக்கி அற்ப இன்பங்களை
நாடி துன்பப்பட்டு மடிகின்றனர்.

என்றும் உறங்காது உயிர்களைக்
காக்கும் அரங்கனை நினையாது
உறங்கிக்கொண்டு கனவுலகில்
காட்சிகளைக் கண்டு மனம்
மகிழ்ந்து திரிகிறது அறியாமையில்
உழலும் மனிதக் கூட்டம்

இருக்கும் செல்வம் இல்லாதோருக்கு
அளித்து இன்பம் அடைவதற்கே
என்பதை அறியாது இன்னும்
இன்னும் வேண்டும் என்று இவ்வுடல்
கீழே விழும் வரை பொருள் தேடும்
மனிதர்கள் பெறுவதோ
என்றும் துன்பம்தான்

அகந்தையும் சுயநலமும்
அகத்தே நிறைந்திருக்க புறத்தே
செய்யும் போலி  சடங்குகளாலும்
அன்பின்றி பிறருக்கு துன்பம்
இழைப்பதையே வாழ்க்கையில்
குறிக்கோளாகக் கொண்டு செய்யும்
வழிபாடுகளாலும் என்ன பயன்? 

மதம், மொழி, இனம்  என எதனோடு
இணைந்தாலும் என்றும் துன்பம்தான்
அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டு
ஆதாரமாய் விளங்கும் நம்முள்ளே
உறையும் ஆன்மாவை அறிந்து
அனைத்து துன்பங்களிலிருந்து
விடுபட்டு மாறா ஆனந்தத்தில்
திளைக்க முற்படுவதுதான்
அகிலத்தில் பிறவி எடுத்ததின்
நோக்கம் 

Wednesday, June 25, 2014

அன்பே சிவம் என்றால் ?

அன்பே சிவம் என்றால் ?




ஓவியம்: தி.ரா .பட்டாபிராமன் 



அன்பே சிவம் என்றால்
அவன் அடியார்க்கு அடியவர்
ஆனதினாலன்ரோ?

அன்பே சிவன் என்றால் அவன் ஏன்
அழிக்கும் கடவுளானான் ?

அவனை அறியவொணாது
நம்மை தடுக்கும் அகந்தையை
அழிப்பதினாலன்றோ ?

உடல்,மனம், புத்தி என்னும்
மூன்றையும் கடந்து அவனை
உணராது தடுக்கும் ஆணவம்
கன்மம் மாயை ஆகிய மூன்றையும்
அழித்து அருள் செய்வதினாலன்ரோ ?

அன்றொருநாள் அமரரையும், அரக்கர்களையும்,
நஞ்சிலிருந்து காப்பாற்ற நெஞ்சில்
நஞ்சை கொண்ட நஞ்சுண்டேஸ்வரா

இன்று இவ்வுலகில் நெஞ்சினில் நஞ்சை
வைத்து கண்ணிலும், வாக்கிலும்
நஞ்சைக் கக்கும் இவ்வுலக மாந்தர்களிடமிருந்து
அபலைகளைக் காக்க மறந்ததேனோ?

தீயவர்களை அழித்து
நல்லவர்களைக் காக்கும்
உன் செயல்.

ஆனால் இன்றோ தீயவர்கள் பெருகிவிட்டனர்
இவ்வுலகில். காரணமின்றி சக மக்களை
சகட்டு மேனிக்கு கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலை  மாற அருள் புரிய வேண்டும்
என்னாட்டவர்க்கும் இறைவனாகிய
தென்னாடுடைய சிவ  பெருமானே.



Saturday, June 14, 2014

இதற்காகவா பிறந்தோம்?

இதற்காகவா பிறந்தோம்?


காலையில் எழுவதும்
காபியைக் குடிப்பதும்
கைபேசியிலோ காட்சி பெட்டியிலோ
காணொளியில்  கண்டதைத் காண்பதும்
வறுத்த ,பொறித்த உணவுகளை கொறிப்பதும்
வேலைக்காக வெளியில்  ஓடுவதும் மீண்டும்
இரவும் அதே கதைதான்

இது அனைவரும் தினமும் தவறாமல்
அரங்கேற்றும் நாடகம் .ஏதோ  ஒரு சில மாற்றங்கள்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

விலங்குகளும், பறவைகளும் மற்ற
உயிரினங்களும் இதையேதான்
செய்கின்றன .அதைத் தவிர வேறு
சிந்தனைகள் எதுவும் அவைகளுக்கில்லை

அவைகளிடம், போட்டி, பொறாமை,
வஞ்சம் தீர்ப்பது, கொலை செய்வது
பழி தீர்ப்பது, சுயநலம் போன்ற தீய
குணங்கள் எதுவும் கிடையாது.



ஆனால் நாமோ மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்
நம்மை எச்சரிக்க வந்த மரணத்தை கண்டு பயப்படுகிறோம்.
அதிலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை.நம்மை காப்பாற்றிக்கொள்ள பல லட்சங்களை ஒழிக்கிறோம். அப்படி
பிழைத்தாலும் மீண்டும்  பயனற்ற குறிக்கோளற்ற வாழ்க்கையைத்தான்
வாழ்கிறோம் என்பது நம்முடைய அறியாமையின் உச்சகட்டம்.

நம்மை படைத்து காத்து வந்த இறைவனிடம் முழுமையாக
சரணாகதி செய்வது கிடையாது. அவன் அருளைப் பெற ஆழ்வார்கள், நாயன்மார்கள், யோகிகளைப் போல் முழு முயற்சிகளை செய்வது கிடையாது.

ஆனால் மற்ற உயிரினங்கள்
அன்போடு வாழ்கின்றன ஆனந்தமாய்
இருக்கின்றன. மரணத்தை இயல்பாய்
ஏற்றுக்கொண்டு இனிதே இவ்வுலகை விட்டு
நீங்குகின்றன.

ஆனால் மனிதர்களாகிய நாமோ உயிர்
வளரத் தேவையான அடிப்படைப் பண்புகளான
ஈவு, இரக்கம் ,அன்பு ,சமதர்ம நோக்கு,
ஆகிய முக்கிய பண்புகளை இழந்துவிட்டோம்.

மனிதர்கள் உடல் சுத்தத்திற்கு  அளிக்கும்
முக்கியத்தை உடலை பின்னின்று இயக்கும்
மனதிற்கு அளிப்பதில்லை .மனதில் காமம், குரோதம்
மோகம், லோபம், மதம், மாச்சர்யம்  என்னும் அயோக்கியர்களுக்கு
இடம் கொடுத்து விட்டோம். அவர்கள் நம்மை அவர்கள் விருப்பப்படி  ஆட்டிப் படைக்கிறார்கள் அவர்களிடமிருந்து விடுபடும் வழி தெரியாமல்
அல்லும் பகலும் துன்பப்படுகிறோம்.

புலன்களின் பின்னே சென்று கண  நேரத்தில் தோன்றி மறையும் அற்ப சுகத்தையே மனம் நாடுகிறது. அப்படி அலையும் புலன்களை இறைவனை நோக்கி திருப்ப வேண்டும். அப்போதுதான் நமக்கு இந்த பிறவியினால் விளையும் துன்பங்களிலிருந்து   விடுதலை கிடைக்கும் . இல்லாவிடில் தறுதலைகளாக இறுதி வரை இருப்போம்.

நாம் செய்யும் பூஜை, பக்தி எல்லாம் கொசுக்களை
கொல்லாமல்  வெறுமனே விரட்டும் கொசு விரட்டிகள் போல்தான்
செயல்படுகிறது.

இதனால் நாம் தொடர்ந்து துன்பத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றோம்.

பல பிறவிகளாக நம்முடைய மனதில் மண்டிக் கிடக்கும் இந்த
கடினமான கறைகளை   அவ்வளவு . எளிதாக அகற்ற முடியாது.




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அதற்கு ஒரே வழி ராம நாமம் சொல்வதுதான்.

நம்பிக்கையோடு. ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் பல பிறவிகளாக நாம் சேர்த்துக்கொண்ட   பாவ புண்ணியங்களை அழித்து பரமனுடன் நாம் ஒன்றமுடியும்.


Friday, June 13, 2014

விழித்துக் கொள்ளுங்கள்


விழித்துக் கொள்ளுங்கள்

முற்றும் துறந்த முனிவராயினும்
மோகத்தில் மூழ்கியுள்ள மனிதராயினும்
முக்காலமும் உணர்ந்த ஞானிகளாயினும்
மனித உடல் தாங்கி மனித குலத்தை
காக்க வந்த அவதார புருஷராயினும்
விதிக்கப்பட்ட காலம் தாண்டி
இவ்வுலகில் தங்க இயலாது

காலம் காலன் மூலம் தன்
காரியத்தினை தவறாது
நிறைவேற்றிவிடும்

விண்ணில் உடலின்றி ஆவியாய்
திரியும் கோடானகோடி ஆவிகள் மீது
கருணை கொண்டு மீண்டும் மீண்டும்
மண்ணில் பிறக்க மனித பிறவி
அளிக்கின்றாள்  . அபார கருணை
கொண்டஅன்னை



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மனித பிறவியின் அருமை பெருமை
உணராது இறைவனை மறந்து
விலங்குகள் போல் வாழ்ந்து
மடிவோர் கோடானுகோடி .

வாய்ப்பை தவறவிட்டோர்
இழிபிறவிகள் எடுத்து மீளாத்
துன்பத்தில் ஆழ்ந்தி கிடக்கின்றன

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் .!

மனிதராக மண்ணில் பிறவி அளித்த
இறைவனை அன்புடன் நினைந்து
அனைத்து  உயிர்களுடன் அன்புடன்
வாழ்ந்து தனக்குரிய கடமைகளை
பலன் கருதாது நிறைவேற்றி
இறைவனுடன் ஒன்றும்  வழியை
மேற்கொள்ளுங்கள்.

நீ எதை எந்நேரமும் நினைக்கிறாயோ
அதுபோல்  ஆகிறாய் என்பது உண்மை


இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் போதும்
தான் என்னும் அகந்தை அழிந்து நாமும் இறைவனோடு
ஒன்றிவிடுவோம். 

Thursday, June 12, 2014

குலசேகரநாதர் திருக்கோயில்

குலசேகரநாதர் திருக்கோயில் 

மிகவும் புராதனமான திருக்கோயில்


எல்லையில்லா  இன்பம் தரும்
நெல்லை மாவட்டம்

அன்போடு தொழுதால்
தொல்லையில்லா வாழ்வு தரும்
தொண்டர்களின் உள்ளத்தில்
உறையும் ஈசன்

திருநெல்வேலி மாவட்டத்தில்
களக்காடு அருகே கிள  பத்தை என்ற
கிராமத்தில் அமைந்துள்ளது

அந்த கோயில் உறையும் ஈஸ்வரனின் மூர்த்தம்  கீழே




அதே கோயிலில் உள்ள வண்ணமிகு
எழில் கொண்ட ரிஷப வாஹனம் கீழே



கூடுதல் விவரங்களுக்கு  கீழ்கண்ட இணைப்பில்

https://plus.google.com/u/0/101660447515460809989/posts?cfem=1





This temple is at Kila Pathai village near kalakad at Tirunelveli dist 49 kms away from.also it is one hr drive from Nagarcoil

Tuesday, June 10, 2014

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் 







வைகாசி விசாகத்தில்
வையகத்து மக்களை காக்க
வையகத்துக்கு வந்தவன்

பொய்யில்லா உள்ளத்தில்
அமர்ந்துகொண்டு
பொங்கி வரும் புனல்போல்
பேரானந்தத்தை தருபவன்

ஆறுதலை கொண்டவன்
அன்புடன் நினைப்போற்கு
ஆறுதலைத் தருபவன்

முருக முருகா முருகா
என்று கூவியழைத்தால்
மும்மலங்களையும் அகற்றுபவன்

இக பர சுகங்களை அளிப்பவன்
இன்னல்கள் நீக்கி
இன்ப வாழ்வை அளிப்பவன்

நினைவிருக்கும்  வரை சொல்லுவோம்
சொல்வோம் அவன் நாமம்
நிலையான அவன் பதம் பெற்றிட