Friday, February 28, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-5)


குறை ஒன்று (ம் ) இல்லை

மறை மூர்த்தி கண்ணா !(part-5)



தொடர்ந்து தன் குடும்பத்தில் 
நிகழ்ந்த சம்பவங்கள் 
அவர் மனதில் நிச்சயமாக 
தாங்க முடியாத சோக 
நினைவுகளை ஏற்படுத்தி இருந்தது 

என்னதான் அவைகளை ஒதுக்கி தள்ளினாலும்
அவர் மனதை அந்த துன்பங்கள் 
அரித்து வாட்டியதும் உண்டு. 

இருந்த போதும் அவர் மனதில்
குறை ஒன்றும் இல்லை என்பதையே அவர்
இந்த பாடலின் மூலம் உலகத்திற்கு 
வெளிப்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. 
இருந்தும் அவர் ஒரு விசித்திரமான 
கலவை கொண்ட மனிதராகத்தான் திகழ்ந்தார். 


பிறந்ததோ ஆச்சாரமான வைணவ 
பின்னணி கொண்ட குடும்பம் 
ஆனால் பூனூலை துறந்தவர் 

அவர் தீவிர சைவ உணவை உண்பதை கடைபிடித்தவர்
இருந்தும் மேலைநாட்டு உணவு பழக்கவழக்கங்களை நன்றாக அறிந்தவர் 


மதுவிலக்கை முழுமையாக ஆதரித்தவர்.

ஆங்கில தினசரியான"பஞ்ச் "பத்திரிக்கையின் 

கேலி சித்திரங்களை ரசித்தவர். 


பாலகங்காதர திலகரின் கொள்கைகளை  நேசித்தவர் 

ஆனால் காந்தியுடன் சுதந்திர போராட்டத்தில் 
தன்னை இணைத்துக்கொண்டவர். 

அதே சமயம் பல கொள்கைகளில் 
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர். 

கட்டுப்பாடற்ற பொருளாதாரக் 
கொள்கைகளை  ஆதரிப்பவர்.

தேவைக்குமேல் தன்னிடம் ஒரு ரூபாய் கூட
வைத்துக்கொள்ளாதவர் .

இதிஹாச நாயகன் , இராமனின் பக்தனாக இருந்தும் 
அவன் வாலியை மறைந்திருந்து கொன்ற 
செயலை  ஏற்றுக்கொள்ளாதவர். 

இப்படிப்பட்ட முரண்பாடுகள் கொண்ட ராஜாஜிதான் 
தன்  வாழ்வில் நிகழ்ந்த அடுத்தடுத்து நிகழ்ந்த 
துயர சம்பவங்களை  எல்லாம் ஜீரணித்து 
அவற்றிலிருந்து மீளும்  வழியை நமக்கு காட்டினார் 
.
இறைவனிடம் சரணடைந்தால்,
எல்லா குறைகளும் மறைந்துவிடும் என்பதை 
குறை ஒன்றும் இல்லை என்ற பாடலின்
மூலம் வெளிப்படுத்தியுள்ளார் 
என்றால் அது மிகையாகாது. 

இன்னும் வரும் 

படங்கள்-நன்றி-கூகிள் 

Thursday, February 27, 2014

பசுமைதான் கடவுள்

பசுமைதான் கடவுள் 





கடவுள் எங்கே என்று
எல்லோரும் தேடுகிறார்கள்.

கடவுள் நம் முன்னேதான் எப்போதும்
காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றான்

அவன் எப்போதும் நம்மோடுதான்
இருந்துகொண்டிருக்கின்றான்

இருந்தும் நாம் அவனை
அறிந்துகொள்ள இயலவில்லை

ஏனென்றால் நம் மனதில் கடவுளைப்
பற்றிய உண்மை வடிவம் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மனதில்
அவரைப் பற்றிய தவறான தகவல்கள்
பதிந்து கிடப்பதால் நம்மால்
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

எவ்வளவோ ஞானிகள் அவனைப் பற்றி
உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தும்.
நாம் அவற்றைக்  கண்டு கொள்வதில்லை.

தொண்டரடிப் பொடி  ஆழ்வார் அவனை
பச்சைமா மலைபோல் மேனி என்று வர்ணிக்கிறார்.

இந்த படத்தைப் பாருங்கள்.
ஆழ்வார் அரங்கனைக் கண்ட மனநிலையோடு
படத்தைக் காணுங்கள்
உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். 

Wednesday, February 26, 2014

இன்று மகா சிவராத்திரி.(1)



இன்று மகா சிவராத்திரி.(1)

PIC_0094


சிவபெருமானை வணங்கி
அருள்பெற மிக உகந்த நாள்

இந்த சிவராத்திரி குறித்து
கணக்கிலடங்கா  புராணங்களும்,
கதைகளும், துதிகளும்
வழிபாடு முறைகளும் உள்ளன

சிவாலயங்களில் இரவு முழுவதும்
பலவிதமான அபிஷேகங்களும்,
வழிபாடுகளும் நடக்கும்.

தீவிர பக்தர்கள் சிவாலயங்களுக்கு
சென்று இரவு முழுவதும் விழித்து
சிவ  லிங்கத்தை தரிசித்துபொழுதைக்  கழிப்பர்.

இரண்டாம் நிலை பக்தர்கள் இரவு முழுவதும்
விழித்திருந்து திரைப்படங்களை பார்த்து
சிவ  ராத்திரி விரதம் கடைபிடிப்பர்.

இந்த சிவராத்திரி விரதத்தினை கடைபிடித்து
விஷ்ணு  பகவான் சக்ராயுதத்தை
பெற்றார் என்று கூறுவார்.

காட்டில் ஒரு வேடனை புலி துரத்த
அவன் உயிருக்கு பயந்து ஓடி ஒரு மரத்தின்
மேலேறி உட்கார்ந்துகொண்டானாம் .

தூக்கம் வரும்போதெல்லாம் அ
ந்த மரத்தில் இலைகளை ஒவ்வொன்றாக
பறித்து பறித்து  இரவு முழுவதும் விழித்திருந்து
மரத்தின் கீழேபோட்டுக் கொண்டிருந்தானாம்

அந்த மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் இருந்ததாம் .
அன்று சிவா ராத்திரியாம் அவன் உட்கார்ந்திருந்த
 மரம் வில்வ மரமாம்.சிவராத்திரி அன்று
இரவு முழுவதும் விழித்திருந்து வில்வ இலைகளை
சிவ  லிங்கத்தின் மீது போட்டதால்
அவன் அடுத்த பிறவியில் ஒரு அரசனாகப் பிறந்தானாம்.
என்று ஒரு ஒரு கதை உண்டு.



அதாவது அவன் தன்னை அறியாமல்
செய்த செயல் சிவராத்திரி விரதம்
கடைபிடித்ததாகி விட்டது.

தன்னை அறியாமல் செய்தாலும்
அந்த விரதத்தின் பயனை அந்த வேடனுக்கு
அளிக்க சிவபெருமான் முடிவு செய்தார்.

நிலைமை அப்படி இருக்கும்போது
அந்த விரதத்தை சாத்திரங்களில்
விதிக்கப்பட்டுள்ள முறைப்படி கடைபிடித்தால் பலன்கள்  கிடைக்காமலா போகும்.
என்பதை வலியுறுத்தத்தான்
இத்தனை ஏற்பாடுகள் நம் முன்னோர்கள்.
வகுத்து வைத்திருக்கிறார்கள்.

ஈடுபாடு இருப்பவர்கள் முறைப்படி
அனைத்தையும் கடைபிடிக்கட்டும்.

முடியாதவர்கள் அனைவருக்காக
ஆலயங்களில் செய்யப்படும் வழிபாடுகளை
கண்டு இரவு முழுவதும் விழித்திருந்து வணங்கட்டும்

இல்லாதவர்கள். சிவா நாமாவளிகளையாவது
உச்சரித்துக்கொண்டு சிவனை நினைக்கட்டும் இந்நாளில்.

அதுசரி இவன் சொல்ல
வந்தது வேறு விஷயம்.

ஒவ்வொரு உயிரும் இரண்டு
விஷயங்களிலிருந்து எளிதாக என்ன
செய்தாலும் தப்பமுடியாது

அது பிறப்பு மற்றும் இறப்பு.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
உள்ள இந்த உலக வாழ்க்கை.

அதன் இடையே அடிக்கடி வந்து போகும்,
உறக்கம் மற்றும்.  மயக்கம்.

அதிலிருந்து தப்பிக்க
என்ன செய்ய வேண்டும். ?

இன்னும் வரும்


பிருகு மகரிஷி (2)

பிருகு மகரிஷி (2)


 பிருகு மகரிஷி (2)

பல யுகங்களுக்கு முன்னால் 
சரஸ்வதி நதிக்கரையில் 
ஒரு பெரிய யாகம் 
ஏற்பாடு செய்யப்பட்டது. 



அதில் பங்கேற்க பெருமை வாய்ந்த 
பல  முனிவர்களும் 
வேத பண்டிதர்களும் அங்கு கூடினர். 
அப்போது பிருகு மகரிஷியும் 
அங்கு வந்திருந்தார் 

அப்போது அவர்களிடையே இந்த 
மகா யாகத்தின் முதற்ப்பலனை 
மும்மூர்த்திகளில் யாருக்கு தருவது 
என்று சிந்தித்தபோது 
ஒரு முடிவும் எட்ட  முடியவில்லை. 

ஏனென்றால்   புராணங்களில் தெய்வங்களும் 
காம க்ரொதாதி குணங்களுக்கு ஆட்பட்டு நடந்துகொண்டதாக 
சம்பவங்கள் வருவதால் இந்த உயர்ந்த யாகத்தின் பலனை சத்வம்,ரஜோ,மற்றும் தமோ குணங்களை வென்ற 
ஒருவருக்குதான் பலனை அளிக்க வேண்டும் என்று 
அவர்கள் முடிவு செய்தனர். 



மனிதர்களை சோதிக்கும் தெய்வங்களையே
சோதிக்க எண்ணி. அந்த வேலையை 
செய்ய பிருகு   மகரிஷியிடம் ஒப்படைத்தனர்.


பிருகு மகரிஷியும் முதலின் பிரம்மாவை 
சோதிக்க சத்ய   லோகத்திற்கு புறப்பட்டார். 



அங்கு சென்றதும் பிரம்மாவைக் கண்டதும் 
அவரை வணங்காமல் அவருக்கு சினமூட்டும் 
வகையில் நடந்துகொண்டார். 
உடனே பிரம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. 



உடனே அவர் மகரிஷியை தண்டிக்க எழுந்தார். 
ஆனால் சரஸ்வதியோ பிரம்மாவை 
சாந்தப்படுத்தி அவரை காப்பாற்றினார்.  

இருந்தும் அவரின் அடாத செயலைக் கண்டித்து 
பிருகு மகரிஷி பிரம்மாவிற்கு கலியுகத்தில் 
யாரும் பிரம்மாவை வணங்கமாட்டார்கள் அ
வருக்கு ஆலயங்கள் இல்லாமல் 
போகட்டும் என்று சாபமிட்டார். 

அதனால்தான் அவருக்கு இவ்வுலகத்தில் 
புஷ்கர் என்ற இடத்தில மட்டும்தான் கோயில் உள்ளது 
மற்ற இடங்களில் கிடையாது. 



அடுத்து அவர் சிவன் உறையும்
கைலாச மலைக்கு சென்றார்.
அங்கு சென்றவுடன் அவரை .
சிவனும் பார்வதியும் தனித்து உள்ளார்கள்
எனவே தற்போது அவரை பார்க்க முடியாது
என்று நந்திதேவர் தடுத்தார் .



உடனே கோபமுற்ற பிருகு மகரிஷி
இனி சிவனுக்கு  லிங்க உருவில்தான் வழிபாடு .
உருவ வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சாபம் இட்டார்.
ஆனால் காசியில் மட்டும் மகாம்ரித்துன்ஜய
ஆலயத்தில் மட்டும்  சிலா வடிவம் உள்ளது

அடுத்து அவரின் பயணம்
விஷ்ணு பகவான் உறையும் வைகுண்டம்
நோக்கி தொடங்கியது .
அவரின்  அனுமதியின்றி உள்ளே நுழைந்தார் .



அப்போது விஷ்ணு கண் மூடி
 நித்திரையில் படுத்திருந்தார்.


உள்ளே சென்ற மகரிஷி அவரை
உறக்கத்திலிருந்து எழுப்பினார்.



ஆனால் அவர் உறக்கத்திலிருந்து   எழவில்லை .

உடனே கோபம் கொண்ட மகரிஷி
அவரின் மார்பில் எட்டி உதைத்தார்.



அவர் எட்டி உதைத்த போது அவர் மார்பில்
காலடிச் சுவடு ஏற்பட்டது .அந்த வடுதான்
ஸ்ரீவத்சம்  எனப்படுகிறது .



உடனே மகாவிஷ்ணு
உறக்கத்திலிருந்து விழித்தார்.
தன் மார்பில் மகரிஷி காலால் எட்டி
உதைத்ததை கண்டு சிறிதும் பதட்டப்படாமல்



மகரிஷியே தங்கள் காலில்
ஒரு காயமும்  படவில்லையே
என்று அன்போடு வினவினார்.



மேலும் மகரிஷியே என் மார்பு   மிக உறுதியானது.
ஆனால் உங்களின் கால் அந்த அளவு
உறுதியானது  அல்லவே என்றார்.


அவர் மகாவிஷ்ணுவின்
பெருந்தன்மையான குணத்தைக் கண்டு
அவர்தான் மும்மூர்த்திகளில் உயர்ந்தவர்
என்றும் மகா யாகத்தின் முதற் பலனை
பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர் என்று
முடிவு செய்து அதை மற்ற முனிவர்களுக்கு அறிவித்தார்.


பகவான் கீதையில் கண்ணபிரான் அனைத்து உயிர்களிலும்   தான் தான் ஆன்மாவாக உறைகின்றேன்  என்று . அறுதியிட்டுக் கூறியுள்ளான் .



அந்த நோக்கில் அவன் பிருகு மகரிஷியை வேறு மனிதராகக் கருதாமல் தன்னில் ஒரு பகுதியாகக் கருதியதால்தான் முனிவர் தன்னை அவமதிப்பதாகக்  கருதவில்லை  என்பதே
நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய  பாடம்..

இந்த உண்மையை உணர்ந்தவர்களே
பிரம்ம ஞானிகளாக விளங்க முடியும்.
சர்வம் பிரம்ம மயம்  என்று சொல்லும் தகுதி
அவர்களுக்கு மட்டுமே உண்டு.

இன்னும் வரும்

படங்கள்-நன்றி-கூகிள் 

Tuesday, February 25, 2014

பிருகு மகரிஷி (1)


 பிருகு மகரிஷி (1)

படைக்கும் கடவுளாகிய 
பிரம்மாவினால் படைக்கப்பட்ட 
ஏழு ரிஷிகளில் ஒருவர்.

ஜோதிட சாஸ்திரம் தொடர்பாக 
இவர் படைத்த நூல்தான் 
பிருகு  சம்ஹிதா 



இவர் த்ரேதா  யுகத்தில்
இருந்ததாக கருதப்படுகிறது. 

இவர் துணைவி தக்ஷனின் மகள் கியாதி ஆகும்.
இவருக்கு ததா ,விததா ,சுக்ரன் என்ற மகன்களும்
ஸ்ரீ என்ற மகளும் உண்டு .

இவர் மிகவும் தபோ சக்தி படைத்தவர் 

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 
இருக்கின்ற சக்திகள் போதாது 
என்று இவர் மேலும் கடும் தவம் மேற்கொண்டார். 
தவத்தை தொடங்கியபோது ஒரு எச்சரிக்கை 
விடுத்துவிட்டு தவத்தைத் தொடங்கினார்.

அது என்னவென்றால் அவர் தவத்தை யார் கலைத்தாலும் 
அவர்களுக்கு தன் நினைவு எலாம் மறந்து போகும் 
என்ற எச்சரிக்கைதான் அது. 

அவரின் தவம் மிகக் கடுமையாக இருந்தது .அதனால் 
அவர் தலையிலிருந்து அக்னி ஜ்வாலை கிளம்பி
அது தேவ லோகத்தை தாக்கியது 



தேவர்கள் பயம் கொண்டு 
சிவபிரானை சரணடைந்தனர் 

ஈசன் தன் கையால் பிருகு மகரிஷியின் தலையிலிருந்து 
கிளம்பிய அக்னி ஜ்வாலையை மூடினார்.
இதனால் அவர் தவம் கலைந்தது .
அவர் விடுத்திருந்த எச்சரிக்கையால் 
சிவன் பிரணவ மந்திரத்தின் பொருளை மறந்துபோனார். 

 ரிஷிகள் எவ்வளவு சக்தி படைத்தவ்ர்களாயினும்
தெய்வங்கள் அவர்களை மடக்கும் வழியை அறியும்.

இவ்வாறு நடக்கும் என்று முன்பே அறிந்திருந்த 
சிவபெருமான் முருகப்பெருமானை 
தன நெற்றிக்கண்ணிலிருந்து  தோற்றுவித்து 
பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்து வைத்திருந்தார் போலும்.
 (நாம் முக்கிய file களுக்கு backup எடுத்து வைத்திருப்பது போல )



முருகப்பெருமான் தன்னுடைய  
படைவீடான சுவாமிமலையில் தகப்பனாகிய 
சிவ பெருமானுக்கு பிரணவத்தின் 
இரகசியத்தினை நினைவுபடுத்தினார். 



இந்த பிருகு மகரிஷி இத்தோடு நிற்கவில்லை. 
சும்மா இருந்தவரை மற்ற 
முனிவர்கள் உசுப்பேற்றிவிட்டார்கள் 

 இன்னும் வரும்

படங்கள்- நன்றி-கூகிள்



Monday, February 24, 2014

கடவுளைக் காணும் வழி

கடவுளைக் காணும் வழி 



கடவுள் நம்பிக்கை உடையவர்கள்
கடவுளை தரிசனம் செய்ய விரும்புகிறார்கள்.

ஆனால் கடவுள் எப்படி இருப்பார்
என்று ஒருவருக்கும் தெரியாது.

கண்டவர்கள் அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில்
ஏதோ  பதிவு செய்து வைத்துள்ளனர். 

அவர்களை பதிவு மற்றவர்களுக்கு ஒரு ஆர்வத்தை தூண்ட பயன்படுமேயன்றி அவரவர் தானே அந்த அனுபவத்தை
பெற்றால்தான் உண்மை விளங்கும்.

இன்று பொதுவாக கடவுளை வணங்குவது  என்றால்,
ஒரு கோயிலுக்கு சென்றோ அல்லது உலகம் பூராவும் உள்ள
கோயில்களுக்கு சென்றோ அங்குள்ள மூர்த்தங்களை
வழிபடுவது என்று செய்து கொண்டிருக்கின்றனர்.
சிலர் வீட்டிலேயே படங்களை வடிவங்களை வழிபடுகின்றனர்.

பல ஆண்டுகள் வழிபாடுகள் செய்தாலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருக்கின்றனர்.

தன்னை  உணர்ந்த ஞானிகள் கடவுளுக்கு வடிவம் கிடையாது.
அவன் ஜோதி வடிவானவ்ன்  .அவன் அன்பு வடிவானவன் என்றுதான்
அறுதியிட்டு சொல்கிறார்கள்.

ஆனால் நாம் அனைவரும் நம்முடைய மனதின் மூலமும், புலன்களின் மூலமும்தான் கடவுளை அடைய விரும்புகிறோம்.

ஆனால் அந்த இரண்டாலும் பல கோடி ஆண்டுகள்  முயற்சி செய்தாலும்
கடவுளை காண முடியாது,உணர முடியாது என்பதே உண்மை.

மனம் மூலம் தான் இந்த உலகில் தொடர்பு கொள்கிறோம்.
மனம் எப்போதும் ஒரு வடிவத்தைத்தான் சார்ந்து நிற்கும்.
அந்த வடிவத்திற்கு பெயர் கொடுப்பது புத்தி ஆகும். பெயர்களும் வடிவங்களும்தான் உலகம்  இந்த இரண்டும் இல்லையேல் உலகம் என்று ஒன்றும் இல்லை.

இந்த இரண்டையும் கடந்து நம்முள் இருப்பதுதான் ஆத்மா
அதன் ஒளியால்தான், அதன் சக்தியால்தான் அனைத்தும் தோன்றுகின்றன.

நாம் காணும் அனைத்தும் நம் மனதில்தான் பதிவுகளாக உள்ளன.
மனம் அழிந்துவிட்டால். கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும்  இல்லை.
நிகழ்காலம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

நம்முள்ளே இருக்கும் அந்த "நான்" என்னும் பரிபூரணத்தை உணர்ந்துகொண்டால். நம்முடைய அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வந்துவிடும்.

பகவான் ரமணர் கூறுகிறார் .நீ கடவுளைக் காண வேண்டுமென்றால் நீ கடவுளாக வேண்டும் என்கிறார்
.


நாம் ஏற்கெனவே கடவுளின் அம்சம்  என்றாலும்
அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இல்லை.

கடவுளின் இயல்பு அன்பு
அன்பே சிவம் என்கிறார்கள்.

நாம் அன்பு மயமாகிவிட்டால்.
அன்பு மயமான கடவுளை கண்டு
ஆனந்தம்  பெறலாம்
 
அதற்கு பகவான் ரமணரின்
உபதேசங்கள் வழிகாட்டும்.



யார் இந்த "நான்"

யார் இந்த "நான்" 




இந்த உடலில் கை உணவை 
எடுத்து வாயில் போடுகிறது. 
அது ஒன்றும் சொல்வதில்லை 

ஆனால் உள்ளிருந்து ஒருவன் 
நான் சாப்பிடுகிறேன் என்கிறான்.
அந்த" நான்" யார்? 

இதேபோல்தான் கண் பார்க்கிறது 
ஆனால் உள்ளிருக்கும் ஒருவன்
 "நான்" பார்க்கிறேன் என்கிறான். 
இப்படி ஒவ்வொரு  செயலுக்கும் 
அவன் "நான்" என்று வாய்தா வக்கீல் போல் 
ஆஜராகிவிடுகிறான். 

இந்த "நான்" யார்? 

அந்த" நானின் " அடுத்த வேஷம். 

எனக்கு தலை வலிக்கிறது ,வலி மண்டையைப் பிளக்கிறது என்று கத்துகிறான்.அதுபோல் உடலில்,மனதில் எந்த வலி ஏற்பட்டாலும் 
அவன் அங்கு ஆஜராகிவிடுகிறான். 

இந்த "நான்" யார்? 

அந்த" நானின் " மற்றொரு வேஷம். 

ஒரு விலையுயர்ந்த பேனாவை வைத்திருக்கிறான். 
அதை யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.
உடனே யார் என்னுடைய பேனாவை எடுத்தது 
என்று உள்ளிருந்து எகிறுகிறான் 

இதுபோல் தனது என்று நினைத்துக்கொண்டிருக்கும் 
எந்த  பொருள் மீதும் மற்றவர் கை வைத்தால் 
அவ்வளவுதான். 

இந்த "நான்" யார்? 

நான் உறங்க செல்லுகிறேன் என்று சொல்கிறான். 
ஆனால் எங்கும் செல்வதில்லை 
உறக்கத்தில் கனவு காண்கின்றான். 
அப்போது அவன் ஒன்றும் சொல்வதில்லை.
ஆனால் கனவிலிருந்து விழித்ததும்  
" நான்" கனவு கண்டேன் என்கிறான். 

இந்த "நான்" யார்? 

உறக்கத்தில் எந்த நினைவும் இல்லை .
ஆனால் உறக்கத்திலிருந்து விழித்ததும் 
"நான்" நன்றாக உறங்கினேன் அல்லது 
சரியாக உறங்கவில்லை என்று சொல்கிறான்.

இந்த "நான்" யார்? 

இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் 
"நான் "பற்றிதான் பகவான் ரமணர் 
தெளிவாக "நான் யார்" என்னும் உபதேசமாகநமக்கெல்லாம்  அளித்துள்ளார். 

அந்த "நான் " பற்றி நம் இதயத்தின் 
உள்ளே சென்று விசாரிப்போம். 
நிலையான் இன்பம் பெற்று 
வாழ "விசா" பெறுவோம். 


  

Friday, February 21, 2014

அபிராமி அந்தாதி (17) (பாடல்(10)

அபிராமி அந்தாதி (17) (பாடல்(10)

அபிராமி அந்தாதி (10)


பாடல்:10

10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


இந்த பாடலை இப்படி வரிசைப்படுத்துவோம் 
அருளே.,
உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. 
ஒன்றும் எழுதாமறையின் அரும்பொருளே
அழியா முத்தி ஆனந்தமே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்

அருளே  வடிவானவள் அபிராமி. 
உமா என்றழைக்கப்படும் அவள் உ (உலகத்திற்கே) மா (மாதா )
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈன்றெடுத்த தாயாவாள். 

அவள் இவ்வுலகத்து மக்களின் 
துன்பங்களைப் போக்க பல அவதாரங்களை எடுத்தவள். 


ஒருமுறை இமவானின் மகளாகப் பிறந்து 
சிவபெருமானை நோக்கி தவம் செய்து அவனையே 
கணவனாக அடையப் பெற்றவள். 

வேதங்கள் எப்போது யாரால் 
இந்த உலகிற்கு வழங்கப்பட்டது 
என்பதை யாரும் அறிந்தாரில்லை. 

ஆனால் அவைகள் ஒலி அலைகளாக என்றும் 
ஆகாசத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. 

அதை தங்கள் தவத்தினால் கண்டுணர்ந்து 
நமக்கெல்லாம் வழங்கியவர்கள். பல ரிஷிகள். 

வேதங்களுக்கு எழுத்து வடிவம் கிடையாது. 
அது காலம்காலமாக செவி வழியாகக் 
கேட்டு மனனம் செய்து தலை தலைமுறையாக 
நமக்கு வந்துகொண்டிருக்கிறது. 

அப்படிப்பட்ட வேதங்களில் போற்றி புகழப்படும் 
அரும்பொருளே என்று அபிராமியை 
போற்றிப் புகழ்கிறார் பட்டர். 

இவ்வுலக ஆனந்தங்கள் எல்லாம் நிலையற்றவை. 
கணத்தில் தோன்றி மறைபவை. 
நிலையான ஆனந்தத்தை வழங்கும் தாயே ,

நீ அளிக்கும் அந்த ஆனந்தத்தை அடைந்தபின் பிறிதொரு ஆனந்தத்தை தேடி அலைய வேண்டிய 
அவசியமில்லாத முக்தியை அருள்பவளே 
என்று அன்னையை புகழ்கிறார். 

நான் நின்று கொண்டிருக்கும்போதும் , 
எதுவும் செய்யாமல் உட்கார்ந்துகொண்டிருக்கும்போதும் ,
படுத்துக் கிடக்கும்போதும், மற்றும் 
எந்த நிலையிலும் உன் பெருமைகளையே 
நினைத்து துதிக்கின்றேன் .

நான் எப்போதும் உன் மலர் போன்ற 
பாதங்களையே வணங்குகின்றேன். 
என்றென்றும் உன் அருளை நாடி. 
என்கிறார் அபிராமி  பட்டர். 

நாமும் நம் மனதில் ஆசைகளை தூண்டி 
நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் எண்ணங்களை 
விடுத்து அம்பிகையின் திருவடிகளையே சிந்திப்போம்.