Friday, December 28, 2012

நலன்கள் பெருகட்டும் 2013 ஆம் ஆண்டில்


நலன்கள் பெருகட்டும் 2013 ஆம் ஆண்டில்

அம்பிகையை சரண் புகுந்தால் 
அதிக வரம் பெறலாம்
 என்றான் மஹாகவி பாரதி 

இந்த உலகம் தியாகத்தால்தான்
இன்னும் நிலை பெற்றிருக்கிறது.

ஈசன் தன உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீ என்று பெயர் பெற்றான்.

தன் பக்தன் எதைக்கேட்டாலும் இல்லை
எனவாரி வழங்கும் வள்ளல் அவன்

திருவாரூரில் தியாகேசன் என்று
பெயர் கொண்டு விளங்குகின்றான்

அங்கு அம்பிகை கமலாம்பிகை என்ற
நாமம் கொண்டு  பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்

கம்லாம்பிகே கமலாத்மிகே
என்ற பாடலையும்
கமலாம்பாம் பஜரே என்ற கிருதியையும்
பாடாத கர்நாடக இசைகலைஞர்களே
கிடையாது.எனலாம்

வலை நண்பர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டில் 
எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழவும்,
 உலகில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகி 
உலக மக்கள் அன்பு, சமாதானத்துடன் வாழவும்
வேண்டி அன்னையிடம் பிரார்த்திப்போமாக .

நான் வரைந்த கமலாம்பிகையின்
படம் வலை நண்பர்களுக்காக.





Sunday, December 23, 2012

ஆன்மிகம் என்றால் என்ன?


ஆன்மிகம் என்றால் என்ன?


இன்று ஆன்மிகம் என்றால்
கோயிலுக்கு செல்வது
பூஜைகள் செய்வது, விரதம் இருந்து
யாத்திரை செல்வது, இறைவனை பற்றி,
இறையடியார்களை பற்றி பேசுவது ,
பஜனை, உபன்யாசங்களுக்கு செல்வது
மதம்,இறைவன் பற்றிய புத்தகங்களை
பற்றி படிப்பது, அதைபற்றி பிறருடன் விவாதிப்பது.

அடுத்த கட்டம் யாராவது ஒரு ஆன்மீக பெரியவர்
அல்லது, மகான்களின் சமாதிகளுக்கு செல்வது,
அது தொடர்பான பூஜைகளில்
கலந்து கொள்வது என்று போகும்.

சிலர் வாழ்நாள் முழுவதும் ஏதாவது தலத்திற்கு
யாத்திரை சென்று கொண்டே இருப்பார்கள்.
சிலர் ஏதாவது ஒரு நம்பிக்கையில்
மட்டும் இருந்துகொண்டு மற்றவைகளை
சரியல்ல என்று வாதிட்டு கொண்டு
வாழ்நாளை போக்கிகொண்டிருப்பார்கள்.

சிலர் ஏதாவது ஒரு மதத்தில் தன்னை
பெயருக்கு இணைத்துக்கொண்டு
வறட்டு சடங்குகளில் வாழ்நாளை
கழித்துக்கொண்டிருப்பார்கள்.

கர்ம காண்டத்திற்கு பிறகு ஞான காண்டத்தை
பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.


சிலர் எலாவற்றையும் படித்துவிட்டு
எந்த சாதனையையும் செய்யாமல்
விவாதித்துக்கொண்டே
ஆயுளை முடித்துக்கொள்ளுவார்கள்.

உலகில் இறைவனை அடைய
உணர்ந்துகொள்ள எத்தனையோ
வழிமுறைகள் உள்ளன.

அவரவருக்கு எந்த முறை ஏற்றதென்று
கண்டுகொண்டு அவரவர் தினசரி
வாழ்க்கை முறையை அனுசரித்து
அதை ஏற்றுக்கொண்டு
அதை நம்பிக்கையுடன்பழகி வந்தால்
இவ்வுலக வாழ்க்கையும் இனிக்கும்,
ஆன்மீக வாழ்க்கையும் இனிக்கும்.

அதை விடுத்து தனக்கு ஒவ்வாத ,
தன்னால் அனுசரிக்க முடியாத முறைகளை
கைக்கொள்ள நினைத்தால்
இவ்வுல வாழ்க்கையும் கசக்கும்
ஆன்மீகத்திலும் எந்த முன்னேற்றமும்
ஏற்படாமல் விரக்தியும்,
மன குழப்பமும் உண்டாகி
துன்பப்பட நேரிடும்.

Saturday, December 22, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசி 



பரம பக்தனாகிய பிரஹலாதன் வாக்கை காப்பாற்ற
தூணில் அவதரித்து அரக்கனை அழித்து
அடியார்களை காத்தருளிய நரசிங்க பெருமான்
மஹா லக்ஷ்மியுடன் சேவை சாதிக்கும்
காட்சியை வரைந்தேன்.பக்தர்களுக்காக



வைகுண்ட ஏகாதசி நன்னாளில் அல்லல் நீக்கி
ஆனந்தம் வாழ்வு அருளும் அண்ணலை  
வணங்கி வாழ்வில் இகபர நலன்களை
பெற்று மகிழ்வீர்.



Wednesday, December 19, 2012

ஆத்ம ஞானம்


ஆத்ம ஞானம் 

ஒரு நிறை கர்பிணியான சிங்கம்.
ஆடுகள் நிறைந்த கூட்டத்தை வேட்டையாடும்போது
ஒரு சிங்கக்குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.

அந்த சிங்க குட்டி ஆடுகளுடன் சேர்ந்துகொண்டு
ஆட்டின் குணங்களுடனே வளர்ந்துவிட்டது.
அது நன்றாக வளர்ந்த சிங்கம் போல்
ஆகிவிட்டபின்பும் ஆடுபோல் கத்திக்கொண்டும்
புல்லை தின்று கொண்டும்
காலத்தை கழித்துக்கொண்டிருந்தது .

ஒருநாள் காட்டில் இருந்த மற்றொரு சிங்கம்
அந்த ஆட்டு மந்தையின் மீது பாய்ந்தது.
அப்போது அங்கு ஆடுகளுடன் இருந்த சிங்கம்
ஆடுபோல் கத்திக்கொண்டே பயந்து ஓடியது.

வேட்டையாடவந்த சிங்கம்
அந்த சிங்கத்தை பிடித்து இழுத்துக்கொண்டுபோய்,
நீ ஆடல்ல சிங்கம், என்று தண்ணீரில்
அதன் முகத்தை காட்டி அதற்க்கு
நினைவூட்டி அதன்
உண்மைத்தன்மையை புரியவைத்தது.

இதைப்போல்தான் நாமும்
 நம்மை உடல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்
 நாம் ஆத்மா என்று
நம்மை உணரவைக்க
சத்குருவால்தான் முடியும்

அப்படிப்பட்ட சற்குருவை அடைய
நாம் இறைவனை தினமும்
மனமுருக பிரார்த்திக்கவேண்டும்.

அவன் அருளால் ஒரு நல்ல சத்குரு
அமைந்துவிட்டால் நம்முடைய
துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிடும்.

என்னதான் புத்தகங்களை எத்தனை தடவை
நாம் ஆராய்ச்சி செய்தாலும்
எப்படி ஒரு நாயால்தனக்கு தானே
 தேங்காயை உடைத்து
அதன் உள்ளே இருக்கும் தேங்காயை
 உண்ண முடியாதோ
அதைபோல்தான் ஆத்ம ஞானமும். .

மார்கழியும் சுற்றுப்புறசூழலும்


மார்கழியும் சுற்றுப்புறசூழலும் 



மார்கழி என்னும்போதிலே 
உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமான 
பனி படர்ந்த குளிர்ந்த காலை பொழுது 

காதினிலே தேன் போல் பாயும் 
மாலவனின் புகழை காற்றில் தவழ 
வைக்கும் பக்தி பாடல்கள்,பாசுரங்கள்
இசைபாக்கள் 

கண்ணுக்கும் ஆத்மாவிற்கும் ஆனந்தம்
தரும் தெய்வீக தரிசனங்கள் 

கிராமங்களில் பஜனை கோயில்களில் 
மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ 
ஒலிபெருக்கிகளில் காதை
பிளக்கும் திருப்பாவை பாடல்கள்

வானொலி,தொலைகாட்சிகளில் 
கண் கவரும் வகையில் கோலம்,இசை 
பிரசங்கங்கள் என மனதை த்ன்வயபடுத்தும் 
நிகழ்சிகள் ,ஆஹா மகிழ்ச்சி பிரவாகம் 
எங்கும் ,ஆனந்தம், மகிழ்ச்சி. 

நாவில் ருசிக்க,வெண்பொங்கல், சக்கரை பொங்கல் 
நெய் மணக்க ,வயிறு நிறைய இது பூலோக 
சுவர்க்கம். 

ஆனால் தூய யமுனை என்று அன்று 
கோதை பாடினாளே அது சாக்கடையாக மாறிப்போய் 
பல்லாயிரம் கோடிரூபாய்களை விழுங்கியும் 
நாளுக்குநாள் நாற்றமடித்து கொண்டு நிற்க 
அந்த யமுனை துறைவனை வணங்கும் 
நாம்வெறும் பாட்டில் மட்டும் 
கிளிப்பிள்ளை போல் ஏட்டு சுரைக்காய் போல்
தூய யமுனை தூய யமுனை என்று 
இன்னும் எத்தனை காலம் பாடப்போகிறோம்?

கங்கையில் புனிதமான காவிரி என்றும், 
காவிரி அன்னை என்றும் பாடிக்கொண்டு 
அதில் அனைத்து கழிவுகளையும் விட்டு 
அதை அசுத்தப்படுத்தும் மதிகேடர்கள்,
மூடர்கள்,பக்தர்கள் போல் வேஷம் 
போடும் போலி எத்தர்கள் 

நாம் எவ்வளவு தீங்கு செய்தாலும் 
நமக்கு குடிநீர்,பயிருக்கு நீர் தரும் 
அந்த தெய்வத்தை நாம் எப்படி 
காப்பாற்ற போகிறோம்? 

கறவைகள் பின் சென்று கானம் 
சேர்ந்துண்போம் என்றாள் ஆண்டாள் 
ஆனால் இன்று அந்த பிஞ்சு கன்றுகள் 
பல ஆயிரக்கணக்கில் உயிரோடு 
கேரளாவிற்கு லாரியில் அடைத்து சென்று
இறைச்சிக்காக கொன்று அழிக்கும் 
அரக்கர்களை யார் அழிப்பது? 

வள்ளல் பெரும்பசுக்கள் இன்று 
வதைக்கப்படுவதை கண்டும் கொஞ்சமும் 
உள்ளம் பதை பதைக்காது, 
அது படும் துன்பத்தை கண்டும்
உள்ளத்தில் ஈரம் இல்லாது 
அதன் இறைச்சியை சுவைத்து தின்றுகொண்டு 
குருவாயுரப்பா ,ஐயப்பா என்று 
ஒரு மாதம் மட்டும் பக்தனாக 
வேஷம் போட்டு கூக்குரல் போடும்
பல மாக்களை யார் திருத்துவது? 

பகவானே நீ அரக்கர்களை அழிக்கவில்லை.
அவர்கள் உன்னுடன் போர் புரிவதை விட்டுவிட்டு
மனிதர்களை அவர் வழிக்கு திருப்பிவிட்டனர்போலும்!

அதனால்தான் இன்று இத்தனை 
அநீதிகள், வன்செயல்கள்.

நடுக்கடலில் அகப்பட்ட காகம் மீண்டும்
கப்பலின் கொடிமரத்தைதான் நாடுவதுபோல்
எங்களை ரட்ஷிக்க உன் திருவடியைதான்
பக்தர்களாகிய நாங்கள் நாடுவது எப்போதும்.
என்பதை நீ அறிவாய். 


படம்-நன்றி.google 




Monday, December 17, 2012

திருப்பாவை


திருப்பாவை 



திருக்குறள், திருவருட்பா என்பதுபோல் 
முற்காலத்தில் திருப்பாவையும் திருப்பா 
என்றுதான் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்

திருப்பாவையில் தி என்ற எழுத்து. திருமாலை குறிக்கும்

திரு என்ற சொல் மகாலக்ஷ்மியை குறிக்கும் 

திருப்பா என்ற சொல் திருப்பாற் கடலை  குறிக்கும் 

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 
மகாலக்ஷ்மியோடு உறையும் திருமாலை 
பள்ளி எழுப்புவதாக அமைக்கப்பட்ட
பாடல்களை கொண்டது திருப்பாவை 

பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் 
இப்பூவுலகில் அறியாமையில் மூழ்கி 
இறைவனை மறந்து கிடந்த காலத்தில்
 மக்களை தட்டி எழுப்ப புவியன்னையே 
கோதையாக அவதாரம் எடுத்து 
இந்த மண்ணில் பரந்தாமன் எடுத்த 
அவதாரங்களை மேற்கோள் காட்டியும், 
இறைவனை எப்படி வணங்கவேண்டும், 
அவன் அருளை பெற என்னென்ன 
வழிமுறைகளை அனுசரிக்கவேண்டும் என்றும், 
அவனை வணங்குவதினால் 
கிடைக்கும் பேறுகள் என்ன என்பதையும், 
அனைவரும் அவன் புகழ் பாடுவதால்
இந்த உலகமும், மக்களும் எப்படி செழித்து
 வளமோடு இன்பமாக வாழ்வார்கள் 
என்பதையும். முப்பது பாடல்களாக
 திருப்பா ஆக கோதை தந்தருளினாள். 

காலபோக்கில் திருப்பாவை பாடு
என்று சொல்லப்பட்டு அது திருப்பாவை என்றே 
அழைப்பது வழக்கத்தில் வந்துவிட்டது.

கீதையில் இறைவன் அருளியுள்ளபடி
மாதங்களில் அவன் மார்கழி மாதமாக இருப்பதால்
இவ்வுலக சிந்தனைகளை தள்ளி வைத்துவிட்டு
அவன் புகழ் கூறும் திருப்பா வை 
பக்தியுடன் பாடி மகிழ்ந்து 
இன்பம் பெறுவோம்.  

படம் -நன்றி google 

Sunday, December 16, 2012

அனுபவ ஞானம்


அனுபவ ஞானம் 



இரையும் அவனே 
இறையும் அவனே 

பாம்பும் அவனே
அதற்க்கு இரையாகும் 
தவளையும் அவனே 

இப்படிதான் அனைத்தும் 
அவன் படைப்பில் 
நம் முன்பு விளையாடுகிறான் 

ஒன்றை கொடுக்கிறான்
ஒன்றை எடுக்கிறான் 

கேட்டதனைத்தையும் கொடுக்கின்றான் சில நேரம்
பல நேரம் கேளாமலேயே அனைத்தையும் நம்மிடமிருந்து 
பறித்து நம்மை பரிதவிக்க விடுகின்றான் . 

மதியை மயக்குகிறான்
பிறகு நம் விதியை எழுதுகிறான்

போதுமான மனம் இன்றி 
பத்தாது பத்தாது இன்னும் வேண்டும் என்றால்
பொட்டென்று அனைத்தையும் போட்டு உடைத்து நொறுக்குகின்றான்  

வேண்டியபோது தருவதில்லை 
அவன் தரும்போது அது நமக்கு 
தேவைப்படுவதில்லை 

சக்கரத்தை கையில் ஏந்திய அவன் 
நாம் சக்கரைக்காக ஏங்குகையில் 
அவன் தருவதில்லை
அவன் தரும்போது நமக்கு வரும்
சக்கரை நோயினால்
அது பயன்படுவதில்லை. 

அவனுடைய சங்கின் நாதம் 
நம் செவிகளில் விழுவதில்லை
நாம் கண்டுபிடித்த கருவிகள் போடும் 
இரைச்சல்தான் எங்கும் நம் காதை பிளக்கிறது 

இறைவா உன் நோக்கம் எனக்கு புரியவில்லை. 
உன்னை புரிந்துகொள்ள பலர் கூறும் வழிகளாலும் 
நீ எனக்கு புலப்படவில்லை  

எனினும் அனுபவத்தால் ஒன்றை அறிந்து கொண்டேன்.

எதை நீ தருகிறாயோ அதை முழு ,மனதுடன்  
ஏற்றுகொண்டால் அதுவே சொர்க்கமாகும்.

நீ கொடுத்ததை விடுத்து பிறிதொன்றை 
நாடினால் நாம் தேடுவதனைத்தும் நரகமாகும். 
என்பதே அது. 

Saturday, December 15, 2012

மார்கழி மாத சிந்தனைகள்


மார்கழி மாத சிந்தனைகள்



















உரசல்கள் இல்லாத
வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

பிரச்சினைகள் இல்லாத
ஒரு தொழிலும் ஒரு தொழிலா?

துன்பமே இல்லாத வாழ்க்கையில்
என்ன சுகம் உள்ளது?

சோதனைகள்
இல்லாதவன் ஒரு பக்தனா?

தோல்விகளே சந்திக்காது
பெற்ற வெற்றி ஒரு வெற்றியா?

இப்படியாக இந்த உலகத்தில்
ஒவ்வொன்றிற்கும் ஒரு
எதிர் விளைவு இருக்கத்தான் செய்யும்.

எதிர்விளைவு இல்லாமல் இருந்தால்
இந்த உலகம் எப்படி இயங்கும்?
இயங்காது

எப்படி. சக்தி இல்லையேல்
சிவமென்று கிட என்பார்களே

அதுபோலத்தான்.
பிரம்மமும் அசையாமல் இருந்தால் அது matter
அது அசைந்தால் energy
தத்துவம் அவ்வளவுதான்.

படைத்தலும், காத்தலும் அழித்தலும் ,மறைத்தலும்
எல்லாம் இந்த இரண்டிற்கும் அடங்கிவிட்டது

இதை விளக்குவதற்காக எண்ணாற்ற இறை அவதாரங்கள்,
ஞானிகள், கணக்கிலங்கா புராணங்கள்,தத்துவ விளக்கங்கள்.

எல்லாவற்றையும் அனுபவித்து ,அறிந்து,
 புரிந்து தெளிவதர்க்காகத்தான்  மனித பிறவி.

அதை நாம் என் துன்பமாக கருதவேண்டும்.

சம்சாகரம் மிக கொடுமையானது என்று
வார்த்தைக்கு வார்த்தை பிரசாரம் செய்பவர்கள்
முதலில் இந்த பேத்தலை நிறுத்துங்கள்.

அனுபவிக்கத்தான் பிறவி.,
அனுபவித்து திருந்தத்தான் இந்த பிறவி
அனுபவங்களை பெறத்தான்  இந்த பிறவி.

அதற்குதான் அந்த பகவான் கிடைத்தர்க்கரிய
மானிட சரீரத்தை நமக்கெல்லாம் அளித்ததுடன்,
நம்முள்ளேயே இருந்துகொண்டு
அதை இயக்குகிறான், பாதுகாக்கிறான்,

நம்முடைய அறியாமையினால்
அந்த உடலை  நாம் பாழ்படுத்தியவுடன், மீண்டும்
வேறு ஒரு உடலை தருகிறான் நம் அனுபவங்களை தொடர.

அந்த கருணா மூர்த்தியை
இந்த மார்கழி மாதம் முழுவதும்
அன்போடு நினைந்து நினைந்து
பக்தி செய்து அவ ன் அடியார்களோடு
கூடி மகிழ்ந்து அவன் அருளை பெற்று
நாம் அனைவரும் உய்வோமாக

Thursday, December 13, 2012

சத்குரு என்பவர் யார்?


சத்குரு என்பவர் யார்?

























எந்த மனிதர் முன்பு நீங்கள் எதுவும் கேளாமலே 
உங்கள் மனம் கேள்வியின்றி, குழப்பமின்றி 
சஞ்சலமின்றி தானே அமைதியாகி நிற்கின்றதோ 
அவர்தான் உங்கள் சத்குரு. 

எவர் உங்கள் மீது வரம்பில்லாமல் அன்பை பொழிகிராரோ,
எவர் நம்மிடமுள்ள குறைகளை பலரறிய போட்டு உடைக்கின்ராரோ 
அப்போது நமக்கு அவர் மீது கோபம் உண்டாகாமல் 
மகிழ்ச்சி உண்டாகின்றதோ, அவர்தான் நம்முடைய சத்குரு. 

எவரை நாம் நேரில் பார்க்காவிட்டாலும் 
நம் மனதில் நினைவாகவும் நிழலாகவும் இருந்துகொண்டு 
அவரை நினைத்த மாத்திரத்திலேயே 
நமக்கு பேரானந்தத்தை அளிக்கிறாரோ 
அவர்தான் நம்முடைய சத்குரு. 

எவரை பார்த்தாலே நம் உள்ளம் பரவசமாகி
வேறு எந்த சிந்தனையுமின்றி நம்மை மகிழ்ச்சியில் 
திளைக்க வைக்கின்றதோ அவரே நம் சத்குரு.

அப்பேர்ப்பட்ட உண்மையான் சத்குருவை 
அடைந்தவன் மோட்ஷம் என்று ஒன்றை 
தனியாக நாடவேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால் அவன் அதில்தான் இருக்கிறான். 
TR Pattabiraman 

Wednesday, December 12, 2012

யோகி ராம் சூரத் குமார்.


டிசம்பர் மாதம்
ஒரு புனிதமான மாதம்

இந்த மாதத்தில்தான் பல யோகிகளும்
தீர்க்க தரிசிகளும் அவதரித்த மாதம்

அப்படிப்பட்ட ஒரு மகான் கங்கை கரையில் பிறந்து
திருவண்ணாமலைக்கு வந்து நம்மிடையே வாழ்ந்து
சமீபத்தில் அங்கேயே இறைவனுடன் கலந்துவிட்டவர்
யோகி ராம் சூரத் குமார்.



அவர் அவதார தினம் இம்மாதம் ஒன்றாம்தேதி
அவர் பக்தர்களால் கொண்டாடப்பட்டது.

அவரை பற்றிய என் கவிதாஞ்சலி .

காசியிலே அவதரித்தாய் அருணையிலே வந்தமர்ந்தாய்
அண்டி வந்தோர் அனைவரின்வாழ்வில் ஒளி வீச செய்திடவே

பொறாமை என்னும் துர்நாற்றம் வீசும் அழுக்காறு தன் உள்ளத்தில் ஓடுவதை உணராது சாக்கடை ஓடும் வீதியிலே சந்தனம் மணக்க வீற்றிருந்த உன்னை விட்டு விலகி சென்றனர் பலர் அந்நாளில்

மணம் வீசும் மலர்களை தேடி வரும் வண்டுகள் போல் எங்கிருந்தோ உன்னை நாடி வந்தனர் பல பேர் உன் பாதங்களில் அடைக்கலம் தேடி
மன நிம்மதி நாடி

நாடி வந்தோருக்கெல்லாம் தடையற்ற உன் அன்பை வள்ளல் போல் வாரி வாரி வழங்கினாய் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று அழைத்துக்கொண்ட நீ

முன்னாளில் உன்னை துன்புறுத்திய மூடர்களையும் அன்பால் திருத்தி அவர்களுக்கும் நல்வழி காட்டியது மனித குலத்தின் மீது நீ கொண்ட கருணையன்றோ

உலக தந்தையின் அவதாரம் என்றறியாது உன்னை சோதிக்க வந்தவருக்கெல்லாம்
உன் அருட்பார்வையாலே உணர்த்திட்டாய் நீ உலகிற்கு போதிக்க வந்தவன் என்று

உன்னை காண வந்தவர் உன் தோற்றம் கண்டு எள்ளி நகையாடியோர் ஏராளம் அதை பாராது அவர்களுக்கு உன் தெய்வீகத்தை உணர்த்தி அருள் வழங்கியது தாராளம்

ஸ்ரீராமனாக அவதரித்தவனே யோகி ராம் சூரத் குமாராக அவதரித்துள்ளான்  என்பதை உணர்ந்தோர் வெகு சிலரே

எங்கிருந்தோ வந்து தாமரையில் தேனை சுவைத்து மகிழும் வண்டுகள் போல் உன் அருளை நாடி உன் பாத கமலங்களில் சரணடைய ஓடி வந்தது பக்தர் கூட்டம்

குப்பையில் கிடந்த மாணிக்கம் போல் ஒளி வீசும் உன் தோற்றம் கண்டு கண்டு குவலயத்தை காத்திடவே நீ வந்த தெய்வீக அவதாரம் என்பதை உணர்ந்துகொண்டது மனித குலம்

தாமரையினுள்ளே சுரக்கும் தேனை உண்டு மகிழும் வகையறியாது அதை சுற்றி வரும் பூச்சிகளை உண்ணும் தவளைகள் போல் உன் மகிமைஅறியாது  உலக மோகத்தில் மூழ்கி உன் தரிசனம் நாடாது வாய்ப்பை தவற விட்டவர்கள் பல் கோடி

குன்று போல காட்சியளித்து அகிலத்தை காக்கும் அண்ணாமலையான் போல உன்னை நினைப்போரின் உள்ளத்தில் இன்ப ஊற்றாய் சுரந்து நின்று எப்போதும் அனைவரையும் காத்திடும் உன் திருநாமம்

யோகி ராம் சூரத் குமார் யோகி ராம் சூரத் குமார்
யோகி ராம் சூரத் குமார்    ஜயகுரு ராயா.

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள்






















 ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள்



மகான்கள் வெறுமனே சொல்லி திரிவதில்லை
உபன்யாசகர் களைப்போல்

அவர்கள் தான் சொல்லுவதை அனுசரித்து 
அதன் பலனை அடைந்து தம்மை போல் 
மற்ற ஜீவர்கள் உத்தம நிலையை அடைய 
வாழ்ந்து காட்டி நம்மை அவ்வழியில் செலுத்துபவர்கள்.

அவர்களின் சரித்திரமே படிப்பவர்களின்
மனதிற்கு பரம சாந்தியை கொடுக்கும்.

அவர்கள் சொல்வதை கடைபிடித்தால் 
முக்தியை கொடுக்கும்


ஸ்ரீதரா என்றால் திருவாகிய இலக்குமியை தரித்தவன் என்றும்
கங்காதரா என்றால் கங்கையை சிரசில் தாங்கியவன் 
என்றும் பொருள் கொள்ளலாம்

பேயாழ்வார் ஹரியும் ஹரனும்
ஒன்றென்று பாசுரம் பாடியுள்ளார்

ஸ்ரீ தியாகராஜா சுவாமியோ ஒரு ராம பக்தன் 
சிவன் ஹரி பேதம் பார்க்கலாகாது என்றும் 
அப்படி பார்த்தால் அவன் கொடிய நரகத்தில் 
வீழ்வான் என்று உணர்த்தியுள்ளார்.

போதேன்ற சுவாமிகளோ சிவ பெருமானை 
வழிபடு தெய்வமாக கொண்ட போதிலும் 
ராம நாம சங்கீர்த்தத்தினை மக்களிடையே பரப்பினார். 

அவர் அடிசுவட்டில் இன்று ஏராளமான பஜன் சமிதிகள் 
பாரெங்கும் இறைவன் நாமத்தை ஒலிக்க செய்து மக்களை 
பக்தி மார்க்கத்திற்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றன. 

சிவபெருமான் ராம நாமத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு 
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மூலம் உபதேசிக்கிறார்.

காசியில் மரிப்பவர்களுக்கு காதில் ஓதி அவர்களை 
முக்தி பெற வைக்கின்றார்

திரு அண்ணாமலையாக நின்று கொண்டு 
ஜோதி தரிசனம் தந்துகொண்டு அருணாச்சலா 
அருணாச்சலா என்று நினைப்போர்க்கே 
முக்தி தருபவன் அன்பே வடிவான சிவ பெருமான்.

இப்படியெல்லாம் இருக்க இன்னும் சிலர் 
தெய்வங்களிடையே பேதங்களை 
பரப்பி வருவது அறியாமையே. 

அவர்களுக்கும் அந்த பரம்பொருள் 
நல்ல புத்தியை அருள்வானாக. 
 

Monday, December 10, 2012

காவிரி நதி நீர் பிரச்சினை


காவிரி நதி நீர் பிரச்சினை 





தமிழ் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளில் 
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை ஒன்று.

இதனால் பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு 
தீராத தலைவலியாக இருந்துகொண்டிருக்கிறது. 
முக்கியமாக கர்நாடகம் ,மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு.

பல ஆண்டுகளாக சில சுய நல சக்திகள் 
இந்த பிரச்சினையை தங்கள் சுயநல லாபத்திற்காக
மக்களின் உணர்ச்சிளை தூண்டிவிட்டு 
குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன 

ஊடகங்களும், மொழி வெறியர்களும் 
இந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக
 பயன்படுத்தி கொண்டு மக்களின் உணர்வுகளை தூண்டி. 
அப்பாவிமக்களிடம் விரோத மனப்பான்மையை தூண்டி விட்டு 
சண்டையிட்டு மடிகின்றனர். 

அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும், 
பொது சொத்துக்களுக்கு சேதங்களும் 
ஏற்படுத்தப்படுவது வாடிக்கையான செயலாகிவிட்டது. 

குடகிலே பிறந்த காவிரி தமிழ்நாட்டில் 
கொள்ளிடத்திலே அரங்கனை வழிபட்டுகொண்டு 
ஆனந்தமாக அவன் இருப்பிடமான 
வங்கக்கடலை சென்று அடைகின்றாள் 
ஆண்டாண்டுகாலமாக .

அரங்கனை அரவணைத்து கொண்டு செல்வதால் 
அவள் கங்கையை விட புனிதமான காவிரி 
என்று அழைக்கப்படுகிறாள் 

அவள் செல்லும் வழியெல்லாம் செழிப்பும் செல்வமும் 
இறைவனின் அருள் ததும்பும் திருக்கோயில்களும் ஏராளமாக காணக்கிடைக்கின்றன

மக்களின் உள்ளத்திலே சுயநலம் என்னும் 
அரக்கன் புகுந்துகொண்ட பின் காவிரி 
தன்னை மறைத்துக் கொண்டுவிட்டாள்,
மன்னவனான மாலவனிடம் 
தஞ்சம் புகுந்துகொண்டுவிட்டாள் போலும். 
காவிரி மேற்பரப்பு வரண்டு விட்டது.

காவிரியில் கசடர்கள் ஆபத்தான கழிவுகளையும், 
குப்பைகளையும் தொடர்ந்து கொட்டுவதும், 
வண்டல் மண்ணை தொடர்ந்து கொள்ளையடிப்பதும்
தடுப்பதற்கு யாருமில்லை. 

இருந்தும் அவன் தன்மக்கள் 
மீது கொண்ட அன்பினால் 
மழைக்காலங்களில் அனைத்தையும் 
கடலில் கொண்டு தள்ளிவிட்டு
தன்னை சுத்தப்படுத்திகொண்டாலும் 
மதியிழந்த மக்கள் கூட்டம் பாடம் 
கற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

காவிரி ஒரு நதியல்ல 
மக்களின் இந்த அறிவீனமான 
செயல்களை 
கண்டு அஞ்சி ஓடுவதற்கு

அவள் ஒரு தெய்வம் .ஏழு கடல்களின் 
நீரையே தன் கமண்டலத்திலே அடக்கி வைத்த 
அகத்திய பெருமானின் ஆசி பெற்றவள் 

எனவே இந்த பிரச்சினைக்கு 
அவளே தீர்வு காண்பாள்

முனிவர்களை விருந்துக்கு அழைத்து 
அவர்களை கொன்று தின்று வந்த வாதாபி 
போன்ற அரக்கர்களை அழித்த 
அகத்திய பெருமான் மக்களிடையே 
பேதங்களை தோற்றுவித்து துன்பத்தை 
விளைவிக்கும் இந்த கலிகால
வாய்ச்சொல் வாதாபிகளை 
அழித்து நன்மையை தருவார் 
என்பது சத்தியம்.

எல்லாம் நம் கையில்தான் உள்ளது.






எல்லாம் நம் கையில்தான் உள்ளது.

மலைகள் எப்போதும், மேல் நோக்கியே
வளர்ந்து நிலைத்து நிற்கும்.

அக்னியின் ஜ்வாலைகளும்
எப்போதும் மேல்நோக்கியே செல்லும்

நீர் எப்போதும் கீழ் நோக்கியே செல்லும்

காற்று எப்போதும் வெற்றிடம்
நோக்கியே செல்லும்

ஆகாசம் எனப்படும் வெட்ட வெளி
இல்லாத இடமே கிடையாது.
அந்த வெட்ட வெளிதான் இறைவன்

அதனால்தான் இறைவனை அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்தவன் என்று அழைக்கிறோம்.

மலைகள் உயர்ந்து நிற்பது இறைவனின்
திருவடிகளை தாங்கதான்

வேங்கட மலைமீது ஸ்ரீனிவாசனும்
சோளிங்கர் போன்ற மலை உச்சியில் நரசிங்கபெருமானும்
திருச்சியில் மலைகோட்டையின் உச்சியில் பிள்ளையாரும்
பழனி உள்ளிட்ட பல மலைகளின் மீது முருகப்பெருமானும்
கைலாய மலைமீது பரமேஸ்வரனும்
சபரி மலையில் அய்யப்பனும்
நந்தி மலையும் சாமுண்டீஸ்வரியும் என
பல தெய்வங்கள் மலையின் சிகரங்களில்
நிலை கொண்டு தன பக்தர்களை
அங்கு வரவழைத்து அருளை வாரி வாரி
வழங்கி கொண்டிருக்கின்றனர்.

அதைபோல்தான் ஜோதி ஸ்வரூபமான
அக்னிபகவானும் திருவிளக்கில் தீபமாய்
எரிந்துகொண்டுபுற இருளை , ஒளியை மனதில்
நினைத்து வணங்குவோருக்கு அக இருளையும்
போக்கி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

நீர் மக்களை தேடி சென்று அவர்களின்
பாவங்களை போக்கி பரிசுத்தமாக்கி
இறைஅருளை பெற மேலிருந்து
கீழ் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.

காற்று பிராணனாக அனைத்து உயிர்களிலும்
வியாபித்து இயங்கி கொண்டிருக்கிறது.

வெட்ட வெளியாக உள்ள இறைவனிடமிருந்துதான்
அனைத்தும் தோன்றுகின்றன,நிலை பெறுகின்றன.
சில காலம் கழித்து வெட்டவெளியில் மறைந்துவிடுகின்றன.

இவை அனைத்தும் இறைவனின் அம்சமாகும், லீலையாகும்

இதை உணர்ந்துகொண்டு, அகந்தையற்று, அன்புடன்
வாழ்ந்து நம் கடமைகளை ஆற்றி இறைவனை நினைந்து
அவன் அருளை பெறத்தான் இந்த பிறவி
நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது .

அதை முழுமையாக பயன்படுத்திகொள்வது
 நம் கையில்தான் உள்ளது.

Friday, December 7, 2012

பரம்பொருள் ஒன்று


பரம்பொருள் ஒன்று

ஆனால் இந்த அண்டங்களை நிர்வகிக்க  
பரம்பொருளை ஆத்மாவாக கொண்டு 
இயங்கும் கடவுள்கள் கோடி கோடி .   

கடவுள்களிடம் பேதம் இல்லை

ஆனால் கடவுள்களை வணங்குபவர்கள்தான்
அவர்களிடையே உயர்வு தாழ்வு
 கற்பித்து சண்டையிட்டு மடிகின்றனர்

ஆதி காலத்தில் இந்த பேதங்கள் கிடையாது.

இடையிலே இவ்வுலகத்தில் அவதரித்த மகான்கள்
பரம்பொருளின் உண்மை தன்மையை விளக்கியபோது 
அவைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. 

மேலும் அந்த மகானின் சீடர்கள் மகான்கள்
வலியுறுத்திய உண்மைகளை சரியாக
புரிந்துகொள்ளாமல் அவற்றை திரித்து
மக்களிடையே தெய்வங்களை 
பற்றி உயர்வு தாழ்வு கற்பித்துவிட்டனர்.  

அது இன்று மக்கள் மனதில் வேரூன்றி 
பரம்பொருளின் உண்மை நிலையை பற்றி 
அறிய முடியாமல் செய்துவிட்டது.
என்பதுதான் உண்மை.

உண்மையில்கடவுள்களிடையே 
உயர்வு தாழ்வு என்ற பேதம் இல்லை.  
அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை 
அவைகள் செய்து கொண்டிருக்கின்றன. 

கீழே  கண்ட  படத்தில் பாற்கடலில் பாம்பணைமேல்
பரந்தாமன் அமர்ந்திருக்க அவனை சுற்றி அனைத்து 
பிரதான தெய்வங்களும் தாமரை மலரை கையில் ஏந்தி 
அவனை வாழ்த்துவதை கண்ட பிறகாவது 
கடவுள்களிடம் உயர்வு தாழ்வு கற்பிக்கும்.
மக்களின் மனோபாவம் மாறவேண்டும்

Saturday, December 1, 2012

அகத்தியரின் பெருமைகள்



அகத்தியரின் பெருமைகள்






















அகத்தியரை பற்றி ஓரளவிற்கு அறிந்தவர்கள்
அவரின் பல அதிசய செயல்களை
பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்

அவைகளில் ஒன்று அவர்
ஏழு கடல் நீரையும் குடித்தது தான்?
அவர் எப்படி குடித்தார்,
அவ்வளவு கடல்நீரும் அவர் சிறிய
வயிற்ருக்குள் அடங்குமா என்ற
கேள்விகளுக்கு அப்புறம் போவோம்

அவர் எதற்க்காக அந்த கடல்
நீர் முழுவதையும் குடித்தார் என்பதை பார்ப்போம்.

இந்த உலகத்தை இறைவன் படைக்கின்றபோதே
நேர்மறை சக்திகளையும் எதிர்மறை சக்திகளையும்
சேர்ந்தே இறைவன் படைத்துள்ளான்

ஏனெறால் இரண்டு சக்திகளும்
ஒன்றுக்கொண்டு ஆகர்ஷிக்கும்போதுதான்
இயக்கம் நடைபெறுகிறது.

இல்லாவிடில் இந்த உலகம் அப்படியே
இயங்காமல் நின்றுகொண்டிருக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்தில் எதிர்மறை சக்திகள்
அதிகமாகும்போது நேர்மறைசக்திகள்
பலம் குறைந்து போய்விடும்.

அப்போதெல்லாம் இறைவனோ அல்லது
அவன் அருள் பெற்ற இறை சக்திகளோ,
அவன் தூதுவர்களான யோகிகளோ,
ஜீவன் முக்தர்களோ,ரிஷிகளோ
இந்த உலகத்தில் தவத்தின் மூலம்
சேர்த்துவைத்த தங்கள் சக்திகளை பயன்படுத்தி
அவைகளை சமன் செய்வது
தொன்றுதொட்டு நடந்து வரும் செயல்.

அதுபோல்தான் நேர்மறை சக்திகளான தேவர்களை
விருதாசுரன் என்ற அரக்கன் மிகுந்ததுன்பதை விளைவித்துக்கொண்டிருந்தான்.

அரக்கர்கள் தங்களை காத்துக்கொள்ள
தவம் செய்து பலவிதமான வரங்களை
பெற்றுக்கொண்டுள்ளதால் நேர்மையான முறையில்
போரிட்டு அவர்களை அழிக்க முடியாது.

அதனால் தேவர்களின் தலைவனான தேவேந்திரன்
அந்த அசுரனை கபடமான முறையில் தாக்கி
அவனை கொன்று விட்டான்.

ஆனால் அவனுடைய தளபதிகள்
தேவேந்திரனை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டனர்

உடனே தேவேந்திரன் அக்னி பகவானையும்,
வாயு பகவானையும் அந்த இரண்டு அசுரர்களை
தேடி சென்று அழிக்குமாறு கேட்டுக்கொண்டான்.

ஆனால் அந்த இரு அசுரர்களோ சமுத்திரத்தின்
ஆழத்தில் சென்று மறைந்து கொண்டு விட்டனர்.
அந்த அசுரர்கள் சூரியன் அஸ்தமனம்
ஆன பிறகு சமுத்திரத்தை விட்டுவெளியே  வந்து,
முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ,
மற்ற உலக மக்களுக்கும் தொடர்ந்து
துன்பங்களை இழைக்க தொடங்கினர்.

இந்நிலையில் அனைவரும் காக்கும்
கடவுளான விஷ்ணு பகவானுடன்
சென்று முறையிட்டனர்.

அதற்கு அவர் கூறிய உபாயம்
கடலை நீரில்லாமல் வற்ற செய்து
அந்த அசுரர்களை அழிப்பதுதான் என்று கூறினார்

அந்த செயலை செய்யக்கூடிய தகுதி படைத்தவர்
அகத்தியர் ஒருவர்தான் என்று விஷ்ணு பகவான் கூறினார்
உடனே தேவர்கள் அகத்திய பெருமானை அணுகினர். வேண்டினர்.
அவர் உடனே கடல் நீர் முழுவதையும் குடித்துவிட்டார்.
கடலும் வற்றியது. காலகேயர்கள் என்ற
அந்த அரக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த உலகத்தில் முக்கால் பகுதி கடல்நீரால் ஆனது.
கடல்நீரிருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது,
வளர்கிறது,உயிரினம் பல்கி பெறுகின்றன.

கடல் வற்றியதால் உலகில்
பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது

மீண்டும் தேவர்கள் விஷ்ணு பகவானை
தஞ்சம் புகுந்தனர். அப்போது அவர் சொன்னார்
கவலைப்படாதீர்கள்,

பகீரதன் என்ற அரசன் ஒருவன் சொர்கத்திலிருந்து
இந்த பூவுலகிற்கு கங்கை நீரை கொண்டு வந்து
கடல்கள் முழுவதையும் விரைவில்
நிரப்பிவிடுவான் என்று.

பகீரதன்,யார் அவன் எவ்வாறு கங்கையை
கொண்டு வந்து கடல்களை நிரப்பினான்
என்பது ஒரு பெரிய கதை
அதை பின்னர் பார்ப்போம்.

அகத்திய பெருமானின் லீலைகள்
வார்த்தைகளில் அடங்காதது.
இன்றும் நாம் வசிக்கும் இந்த பூமியை
இறைவனின் ஆணைப்படி
நிர்வகித்துக்கொண்டிருக்கிறார் என்பது சத்தியம்.


நன்றிகட்டுரை-மூலம் Sri P.R. Ramachander
அம்ரிதவர்ஷினி-மின் இதழ்-அக்டோபர்.2012