Wednesday, April 10, 2013

இறைவடிவானகுருவே


இறைவடிவான  குருவே 





புறத்தே  உலகாய் 
விளங்கும்  இறைவா 
அகத்தே  என்  ஆன்மாவாய்  
விளங்கும்  உன்னை  
என்று  காண்பேன் ?

இருள்  சூழ்ந்த  என்  உள்ளத்தில்  
உன்  ஒளி  வெள்ளம்  
பாய்வது  எப்போது ? 

தரிசாய்    கிடந்த  என்  மனம்  
உன்  தரிசனத்தாலன்ரோ 
உயிர்  பெறும்  

அவனியில்  அவப்பெயர் 
பல   ஏற்றேன் 

அனைத்தையும் உன் செயல் 
என்று ஏற்றுக்கொண்டேன் 
என்றாவது ஒருநாள் 
உன்  அருள்  கிடைக்குமென்று  

துன்பம்  பல  அடைந்தேன் 
இன்பதேனாகிய  நீ  அதை 
நீக்க  வருவாயென்று நம்பி 

எல்லா  உயிரிலும் 
நீ  இருந்தும்  அதை  அறியும் 
திறன்  எனக்கில்லை  

என்  இதய  துடிப்பாய் 
 நீயிருந்தும்  
உன்னை  உணரும்  
சக்தி  எனக்கில்லை


உன்னை  உணரா  
என்  உள்ளத்தில்  
கவலை  சிலந்திகள் 
வலை  விரித்து  என்னை 
தின்றுகொண்டிருக்கின்றன  

என்னை  முழுவதும்  
தின்று  அழிப்பதற்குள்  
இறைவா  என்னை  காப்பாற்று


பக்குவமில்லா  என்  மனதில்
கணக்கின்றி  விதைகள்  
விதைத்தேன்  உன்னை  காண 
;
அத்தனை  விதைகளையும்  
அவநம்பிக்கை   என்னும்  எறும்புகள்  
தின்று  முளைக்காமல்  
செய்து விட்டனவே 

என்னை  சோதனைகள்  
செய்தது  போதும்  
வேதனையில்  
ஆழ்த்தியது  போதும்  
இனியும்  தாமதியாது  
எனக்கருள்  செய்ய  வாராய்  
என்  தெய்வமே  

உன்னை  தேடி  தேடி  
சோர்ந்துவிட்டேன் 
உன்னை  நாடி  வந்த  
என்னை  உதறிவிடாதே  

என்  நாடி  துடிப்பு  நிற்குமுன்  
என்னை  காப்பாற்ற  வந்திடுவாய்  

மாறுகின்ற  மனமும் 
தடுமாறுகின்ற   புத்தியும்  கொண்டு   
உன்னை  அறிய  இயலுமோ  
நீயாக  என்னை 
தடுத்தாட்கொள்ளாவிட்டால்  

குருவாய்  வடிவெடுத்து  
வந்த  தெய்வமே  
அஞ்ஞான  இருளை  
அழித்திடும்  சூரியனே 
அன்புடையோர்  விழிக்கு  மட்டும்  
அருட்காட்சி  தந்தருளும்  
இறைவனின்  அற்புதகாட்சியை  
இவனும்  பெற்றிட  
அருள்  செய்வாயே . 

2 comments:

  1. உருக வைக்கும் தெய்வீக வரிகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இறைவை நோக்கி உள்ளம்
      வெண்ணையாக உருகினால்தான்
      நெய்யாகிய இறைவனை அடையமுடியும்.

      Delete