Tuesday, August 12, 2014

எதைத் தேடுவது?

எதைத் தேடுவது?

எல்லோரும் கூறுவார்கள்
பொருளைத்தான்  தேடவேண்டும் என்று.

சரி எந்த பொருளைத் தேடுவது?

இல்லறத்தான் தேடும் பொருள் ஒன்று

அந்த பொருள் இல்லாதவனுக்கு இந்த
உலக வாழ்க்கை ஒரு சுமை

அதனால்தான் பொருளில்லார்க்கு உலகம் இல்லை
என்றார் திருவள்ளுவர்

ஆனால் அந்த பொருள் மட்டும் தேடுவதுதான்
மனிதப் பிறவியின் நோக்கமா என்றால் இல்லை
என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று ஒருவருக்கு சொந்தமான பொருள் சில காலம் நமக்கு சொந்தமாகலாம்.நாளை அது வேறு ஒருவரின் உடைமையாகிவிடும்.

அல்லது அழிந்துவிடும், அல்லது கள்வரால் அபகரிக்கப்பட்டுவிடும்.

அதனால்தான் மனிதன் அடைய வேண்டிய பேறுகளில்
பொருளை இரண்டாவதாக வைத்து வீடு பேற்றை நான்காவதாக
முறைப்படுத்தி வைத்தார்கள்  நம் முன்னோர்.

அதும் பொருளை நேர்மையான அற வழியில் ஈட்ட வேண்டும் என்றும்
ஈட்டிய பொருளை அற வழியில் பயன்படுத்தவேண்டும்,

அப்படி வாழ்க்கையை நடத்தினால் கிடைப்பதுதான் இன்பம் என்றும்.
அதை அடுத்து உலக பொருளின் மீது மோகத்தைக் குறைத்து
பரம் பொருளின் மீது நாட்டத்தை செலுத்தவேண்டும்.

ஈட்டிய பொருளை இல்லாதார்க்கு ஈவதே
உண்மையான இன்பம் என்றார்கள்.

எல்லாவற்றையும் தனக்கென வைத்திருப்பவன்
அடையும் இன்பம் போலியானது

ஆனால் இன்று மனிதர்கள் இந்த உலகத்தை விட்டு நீங்கும்வரை அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு அலைவதால் அவர்களுக்கு சோகம்தான் மிஞ்சுகிறது

மக்களின் வாழ்வில் திருப்தி என்ற எண்ணம்  அறவே இல்லாமல் போய்விட்டது.

இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் எண்ணம் இல்லை
பிறர் மெச்ச வேண்டுமென்று  பாடு பட்டு சேர்த்த பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

அளவுக்கு  அதிகமாக ஆசைகளை வளர்த்துக்கொண்டு
அல்லல்  படுகிறார்கள்

மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும்  ஒரு சிலரே
சுருட்டிக்கொண்டதால் இன்று உலகில் போட்டியும், பொறாமையும், வறுமையும், குற்ற செயல்களும், ஆதிக்க வெறியும், போராட்டங்களும் பெருகிவிட்டன

மக்கள் மனதிலும் அமைதி இல்லை,
அவர்களை ஆளுபவர்களின்  மனதிலும் அமைதியில்லை.

உலகத்தில் நல்ல பண்புகள் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வளரவேண்டும். அப்போதுதான் அந்த மக்கள் இருக்கும் நாடும் ,இந்த உலகமும் நன்றாக இருக்கும்.

மனங்களில் பேராசை ஒழியவேண்டும், அன்பு பெருகவேண்டும்.
வெறும் வெற்றுக் கூச்சல்கள் போடும் மத பிரசாரங்களால் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை.

மதங்களின் உண்மையான கோட்பாடுகளை பிறரை இகழாவண்ணம்
கடைபிடிப்பதில்தான் இந்த உலக அமைதி இருக்கிறது

இறைவனைப் பற்றி வாய் கிழிய பேசுவதால் எந்த பயனும் இல்லை

இறைவன் அளித்த எல்லா நலன்களும் இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் சொந்தம்,அது தனக்கு மட்டும்தான் உரியது என்ற ஆதிக்க எண்ணம் ஒழியவேண்டும்.

அது நடவாதவரை. இந்த உலகில் அமைதி என்பது கானல் நீரே. 

1 comment: