Friday, December 19, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை(5)

ஆண்டாள் காட்டும் அருட்பாதை(5)

பாசுரம்(5)





மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்செப்பேலோ ரெம்பாவாய் 


தீ உறுதியான உலோகத்தையும் இளகச்  செய்துவிடும் 
எரிமலையில் வெளிப்படும் தீக் குழம்போ கல்லையும் 
உருக்கி ஆறுபோல ஓடச் செய்துவிடும்.ஆற்றல் பெற்றது. 

நம் மனமும் இரக்கம்  என்னும் உணர்வு இல்லாமையால் 
கல் போன்று இருக்கின்றது 
கல்லுக்குள்  இருக்கும் தேரைக்கும் உணவு அளிக்கும் கண்ணபிரான். நம் மனதுள்ளும் இருக்கின்றான். 
அவன் வெளிப்படவேண்டுமேன்றால். அந்த கல்  உடைக்கப்படவேண்டும்.
அதற்கு நாம் அவனிடம் பக்தி செய்ய வேண்டும். 
அவனைக் காண தீய சிந்தனைகளை   விட்டுவிட்டு அவன் நினைவாகவே இருந்தால்தான் அந்த கற்கோட்டை உடைக்கப்பட்டு வெளியே வீசி எறியப்படும் 

அப்போது ஒளிவடிவான கண்ணன்  நம் முன்னே வெளிப்படுவான்.
நாம் அந்த மாயையை விரட்டும், மாயக் கண்ணனை, 
நம்மை யெல்லாம் காப்பாற்றுவதர்க்காக 
வடமதுரையில் வந்துதித்தவனை ,
ஆவினங்களை மேய்க்கும் ஆயர் குலத்தில் 
வளர்ந்தவனை எப்போதும் நினைந்து  பக்தி செய்தால் 
அந்த பக்தியினால் வெளிப்படும் தாபம் 
அனைத்து  பாவங்களையும் எரித்து காணாமல் செய்துவிடும்.
 கல் போன்ற நம் மனதையும் கரைத்துவிடும் 
விஷமம்  செய்தமைக்காக உரலில் கட்டி போட்ட யசோதைக்கு விஸ்வ ரூபத்தைக் காட்டிய கண்ணனின் லீலைகளை நாம் சிந்தித்தால் வினைகளின் விளைவுகளில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நம் போன்றோர்களின் கட்டு தானாகவே அவிழ்ந்துவிடும்.
 நாம் எந்த முயற்சியும்  செய்ய வேண்டியதில்லை. 
மலையிலிருந்து உற்பத்தியாகும் நதி தூய்மையாக இருக்கிறது 
நம் கண்ணனைப் போல .
அதுபோல்தான் நம் மனமும் இருக்கவேண்டும். 
ஆனால் இன்று  யமுனை நதி மாசடைந்துவிட்டது  
அதுபோல் நம் மனதிலும்   காமம், பேராசை, வஞ்சகம் போன்ற தீய எண்ணங்கள் நம் மனதில் நிறைந்து அசுத்தமாகிவிட்டது 


மனம் சுத்தமாக வேண்டுமென்றால் 
கண்ணனை நினைக்க வேண்டும் 
பக்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்.
 நம் மனம் சுத்தமாகிவிடும். 
நம், வாக்கு, நம் செயல் சுத்தமாகிவிடும். 
அதற்கு உழைக்க வேண்டும் 
அதுவும் நல்ல நோக்கத்துடன், 
அவன் நினைவோடு 
நம் கடமைகளை செய்தால் போதும்.
 

பூமாலைகளை அவனுக்கு சூடி 
,பாமாலைகளால் அர்ச்சித்தால் 
நம்மை தூய்மையாக்கி ,நம் தவறுகளை மன்னித்து ,
நல்லதோர் வாழ்வை அருளுவான்
கண்ணன் என்கிறாள் ஆண்டாள்
 
படங்கள்-நன்றி-கூகிள்

2 comments:

  1. /// உழைக்க வேண்டும் - அதுவும் நல்ல நோக்கத்துடன்... /// சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete