Saturday, January 12, 2019

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.

நீங்கள் அத்தனை பேரும்  
உத்தமர்தானா சொல்லுங்கள்.

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை மனதை
தொட்டுப் பார்த்து கொள்ளுங்கள்
என்ற ஒரு திரைப்பட பாடல் வரிகள்
அனைவருக்கும் பொருந்தும்

இதற்கு எந்த  சாயமும் பூச
வேண்டியதில்லை.

ஏனென்றால் இன்று ஓவ்வொரு கூட்டமும்
மற்ற கூட்டத்தை குறை கூறியே
பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன.

பிறர் மீது குறை காண்பதால்
யாரும் எந்நாளும்  உத்தமர் ஆகிவிடமுடியாது.

அவர்களுடன் வேண்டுமானால்
ஒரு கூட்டத்தை சிறிது காலம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் அனைவரையும் சமமாக
கருதி அனைத்து  உதவிகளையும் கேட்காமலேயே
வழங்குகின்றான்.

அவன் கருணையே வடிவானவன்.
அவன் ஒளியாய், மழையாய் ,காற்றாய்.
பறந்து விரிந்த வான்வெளியாய் ,ஒலியாய்
தன் படைப்புகள் நலமாக வாழ உதவுகின்றான்

ஆனால் ஆணவத்தால் அறிவிழந்து மனிதர்கள்
தங்களிடையே பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டு
ஒருவர் மீது குறை கூறி பகைமை பாராட்டிக்கொண்டு
இவ்வுலகை நரகமாக்கிவிட்டனர்.

பிறர் மீது குறை காண்பவன் தன்னிடம் உள்ள
குறைகளை காண மறுக்கிறான்.

அவன் என்றும் நிம்மதியாய் இருப்பதில்லை
எப்போதும் ஒரு பதட்டத்துடனேயே காணப்படுகிறான்.

அவனும் திருந்துவதில்லை.
மற்றவர்களையும் திருந்த  விடுவதில்லை.

ஆனால் தன் சக  உயிர்களிடம் பிரதிபலன் காணாது அன்பு செலுத்துபவர்களுக்கு இந்த குறை காணும் குணம் இருப்பதில்லை.

அன்பு என்பது இறைவனின் குணம் .

அது மனிதர்களிடம் பிரதிபலிக்கதொடங்கிவிட்டால்
அவர்கள் இறைவனிடம் தனியாக
எந்த விதமான வழிபாடும்
மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஒரு மனிதன் வாழ்நாளில் அடையவேண்டிய மிக பெரிய முக்கியமான சொத்து. எந்தவிதமான சூழ்நிலையிலும்
மனம் அமைதியாக இருப்பதுதான்.

இந்த அமைதியை பெறுபவர்களுக்காக
அங்கும் இங்கும் அலைகின்றனர்.
ஆயிரம், லட்சம் என சேர்த்து வைத்த  காசையும்
நேரத்தையும் வீணடிக்கின்றனர்.

அவர்களை வைத்து உலகம் முழுவதும்
ஏமாற்று பேர்வழிகள்
நல்ல காசு பார்க்கின்றனர்.

எத்தனையோ போலி சாமியார்களை
சிறைக்கு அனுப்பிய பின்பும்.
சிறையிலிருந்தே பலர் தங்கள்
ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

அமைதி என்பது நம் உள்ளத்தில்தான்  உள்ளது.
அங்கே சில மாற்றங்களை செய்தால் அமைதி தானே வரும். 

உறக்கத்தில் அந்த அமைதியை தினமும்
 அனைவரும் அனுபவிக்கின்றோம். 
அதற்காக நாம் ஒரு முயற்சியும் செய்வதில்லை.
அது எப்படி என்றால் அப்போது மனமும்  இல்லை. நம்மை அலைக்கழிக்கும் எண்ணங்களும் இல்லை. அதுதான் காரணம்.

முயற்சியில்லாமல் அடையக்கூடிய ஒன்றுக்காக வீண் முயற்சி செய்வதுதான் அறிவீனத்தின் உச்ச கட்டம். 

அன்பில்லாமல் செய்யப்படும் அனைத்து  வழிபாடுகளும்
ஓட்டை பானையில் ஊற்றப்படும் தண்ணீர் போன்றதே.
அதில் என்றும் நீர் நிரம்பாது.

அதை அடைவதற்கு மிக எளிய வழி
அனைவரையும் நேசிப்பது.

அதுவும் தன்  மீது வெறுப்பை காட்டுபவர்களை
மிக அதிகமாக நேசிப்பது. 

1 comment: