Wednesday, February 5, 2014

எண்ணங்கள் என்றும் அழிவதில்லை(தொடர்ச்சி)

எண்ணங்கள் என்றும் அழிவதில்லை(தொடர்ச்சி)

எண்ணங்கள்
என்றும் அழிவதில்லை 





இந்த கட்டுரை தொடர்பாக திரு ஸ்ரீராம் எழுப்பியுள்ள கருத்துகளுக்கு இவன் சிந்தனையில் தோன்றியவை. 




விளக்கங்கள் படித்தாலும், கஷ்டம்தான் ஸார்.. பழகிப் பார்க்க வேண்டும்! :)))

என் அன்புக்குரிய ஸ்ரீராம் அவர்களே 
முதலில் இந்த எண்ணத்தை உங்கள்  மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்
.பிறகு மற்ற எண்ணங்களை மிக எளிதாக வெளியேற்றிவிடலாம் .

முயற்சி செய்யுங்கள்

முடியாதது என்று இந்த உலகில் எதுவும் இல்லை.

முயன்று ஜெயித்தவர் ரமண மகரிஷி நம் கண் முன்னே நிற்கிறார் நமக்கு வழிகாட்ட  

அவர் தெளிவானபாதையை காட்டியுள்ளார் 

பலர் அவர்  கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. 
ஏனென்றால் அவர்கள் தற்போது செல்லும் வழியிலேயே செல்ல விரும்புகின்றனர். 
அவர்கள் மனதை அழிக்க விரும்பவில்லை. 

ஒட்டகம் சப்பாத்திக் கள்ளியை விரும்பி உண்ணும் 
அதில் உள்ள முட்கள் அதன் வாயைக் குத்தி ரத்தம் வந்தாலும் 
அது அதை சாப்பிடுவதை நிறுத்தாது.

அதுபோல்தான் மனிதர்களும் புலனின்பங்களை விடத் தயாராக இல்லை 
எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும். 

இன்னும்  கடந்த காலக் கதைகளையே பேசித் திரிகின்றனர். அதையே கற்பனையில் நினைத்துக்கொண்டு காலத்தை கழிக்கின்றனர்.இவைகள் எல்லாம் மனதில் நிகழ்பவை என்று எத்தனை ரமணர்கள் வந்து அவதரித்து கூறினாலும்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 


எவ்வளவு காலம்தான் கனவுலகத்தில் வாழ்வது?

எப்போதுதான் கனவுகள். மற்றும் உறக்க ,மயக்க  நிலைகளைக் கடந்து  நிரந்தரமான சத் சித் ஆனந்த நிலையை அடைந்து அதிலேயே நிலைத்து நிற்பது என்ற சிந்தனையை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. 

அவரின் சிந்தனைகளை 30 ஆண்டுகளாக இவன் மண்டையில் ஒரு மூலையில் போட்டு உருட்டிக்கொண்டிருக்கிறான்

அவர் முழுவதுமாக இறங்கிவிட்டார்.
 அடைந்து அந்த நிலையில் நின்றுவிட்டார். 

அவரைப்போல் இவனுக்கு வெற்றி கிடைக்காவிடினும் 
இவன் மனம் அமைதியாகி விட்டது. 

பல ஆண்டுகளுக்கு முன் குழப்பத்திலும்,
 பல இன்னல்களில் சிக்கி இயலாமைகளை நினைத்து விரக்தியும் கொண்டு அமைதியற்று போராடிக்கொண்டிருந்த மனம் தற்போது அமைதியாக இருக்கிறது.

ஒரு காலத்தில் அது வேண்டும், இது வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், இதைச்  செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் ,ஏமாற்றியவர்களை பழி வாங்க வேண்டும் ,அங்கே போக வேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் இவனை நச்சரித்த மனம் இன்று எதையும் சொல்வது கிடையாது 

நிம்மதியாக இருக்கிறது. 
எப்போதாவது கவலை மேகங்கள் வந்தாலும் 
உடனேகலைந்து  விடுகிறது. 

இவனை இரவில் தூங்கவிடாமல் தொல்லை செய்துகொண்டிருந்த கடந்த கால கசப்பான அனுபவங்கள் உறங்கப்போய்விட்டன 

எது கிடைத்தாலும் சரி. ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் சரி. இழப்புகள் ஏற்பட்டாலும் சரி 
மனம் சம நிலைக்கு விரைவில் வந்து விடுகிறது. 


இவனைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு  இது போறாதா ?

அமைதியைத் தேடி இவன் எங்கும் செல்வதில்லை
 யாரிடமும் செல்வதில்லை.
அமைதி இவனுள்ளே இருக்கும்போது 

எல்லாம் ரமணரின் சிந்தனைகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து சிந்தித்ததின்பலன்கள் மேலே கூறியவை 

இவன் பெற்ற அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்குமே
 என்றுதான் கடந்த சில நாட்களாக ரமணரின் தத்துவங்களை உங்களுடன்  பகிர்ந்துகொண்டு வருகிறான் 

எல்லோரும் முயற்சி செய்தால் 
காலப்போக்கில் தானாகவே வந்தமையும்.

அதற்கு மன ஒருமைப்பாடு வேண்டும்,பொறுமை வேண்டும்  
விடா முயற்சி வேண்டும்.  

 அனுதினமும் மனதை அமைதியாக 
இருக்கப் பழக்க வேண்டும்

எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும்
குறைத்துக்கொள்ள வெண்டும்.

தேவையில்லாமல்,விவாதங்களிலோ,போட்டிகளிலோ, தேவையற்ற கேளிக்கைகளிலோ மனதை செலுத்தக்கூடாது. 

அன்பாக இருக்க முயற்சி செய்யவேண்டும். விட்டுக்கொடுத்து பழக வேண்டும்

குறைகளைக் காணாமல் நிறைகளை எடுத்து சொல்லும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் 

இவைகளெல்லாம் உடனே வராது.
ஆனால்  ஒவ்வொரு தடவை தவறு செய்யும்போதும் இனி அவ்வாறு செய்யக்கூடாது என்ற எண்ணம் வரவேண்டும்.

அது போதும் சில் ஆண்டுகளில் நம்முடைய குணத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகிவிடும். 

எப்போது நேரம் கிடைக்கிறதோ
அப்போதெல்லாம் செய்யலாம் வீட்டில் எல்லோரும் உறங்கும்போது தினம் 30 நிமிடம் மனதை கண்காணியுங்கள்.
ஒரு நாள் கூட தவறாது குறிப்பிட்ட  நேரத்தில் செய்யவேண்டும் அவ்வளவுதான் செய்ய வேண்டியது.

இந்த முயற்சியை சில மாதங்கள் செய்தால் மனம் தன்னை ஒருவர் கண்காணிக்கிறார் என்ற எண்ணத்தை பதிவு செய்து கொள்ளும்.
சிறிது காலத்திற்கு பிறகு உங்கள்
 மனமே உங்கள் வழிக்கு வந்துவிடும் 
உங்கள் வழிக்கு வந்தபின்புதான் ரமணரின் உபதேசங்கள் வேலை செய்யத் தொடங்கும். 

9 comments:

  1. //அதுபோல்தான் மனிதர்களும் புலனின்பங்களை விடத் தயாராக இல்லை எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும்.//

    ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு எண்ணம் என்று எடுத்துக் கொள்ளலாமா... வாலிப வயதில் காதல், நடுத்தர வயதில் கவலை, 60 வயதுக்கு மேல்தான் ஆன்மிகம் பற்றி சிந்திக்கிறான் மனிதன் என்று சொல்லலாமா?

    ரமணர் நான் படித்ததில்லை. என் நண்பர் ஒருவரும் என்னைப் படிக்கச்சொல்லி, சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

    மனதை அரை மணிநேரம் கண்காணிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் வேலைகளை முடித்து நான் படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் வருகிறதா?
      நன்றாக தூங்குங்கள். ரமணர் matter ஐ அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

      Delete
    2. படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகிறது என்பதே மிகப் பெரிய விசயம்...!

      Delete
  2. கண்காணிக்க வேண்டும் என்றால் மனம் எதைப் பற்றி எண்ணுகிறது என்று பார்க்க வேண்டுமா?

    எனக்கு ஏதாவது கவலை, பிரச்னையினால் மனம் துவண்டிருக்கும்பொது அப்படிச் செய்வதுண்டு. இப்போது நம் மனதில் என்ன பிரச்சனை என்று மனம் வாட்டமடைந்திருக்கிறது என்று யோசித்து இது ஒரு பெரிய விஷயமா... நடப்பது எல்லாம் நன்மைக்கே, தானே சரியாகும் என்று விட்டு விடும் பழக்கம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வீட்டு ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
      தெருவில் எத்தனையோ வண்டிகள் ஓடுகின்றன. எத்தனையோ மனிதர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒன்றும் பேசாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் .இன்னும் எத்தனையோ உங்கள் கண் . முன்னே .நீங்கள் அவைகள் எதனிலும் கவனம் செலுத்துவதில்லை. வெறுமனே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். அதுபோலத்தான் மனதில் எழும் எண்ணங்களை வெறுமனே பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருங்கள். அவைகளை கண்டு கொள்ளாதீர்கள்.அவைகள். ஒன்றொன்றாக வந்து போய்விடும். அதைத்தான் நீங்கள் சில காலம் செய்து கொண்டிருங்கள்.

      Delete
    2. இன்றுமுதல் பயிற்சி செய்கிறேன்.

      Delete
    3. விடா முயற்சியே வெற்றி தரும்.
      வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
  3. // ஒவ்வொரு தடவை தவறு செய்யும்போதும் இனி அவ்வாறு செய்யக்கூடாது என்ற எண்ணம் வரவேண்டும்... //

    மாறுவதற்கு இது ஒன்றே போதும் என்று நினைக்கிறேன்...

    பல நேர்மறை எண்ணங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete