Wednesday, December 18, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-3)


அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-3)


ஆண்டாள் தன்னுடைய மூன்றாவது
பாசுரத்தை பாடுகிறாள்





ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்
நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெ லூடு
கயல் உகளப் பூங்குவளைப்
போதில் பொறிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை  பற்றி வாங்க
குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேலோ ரெம்பாவாய்

இந்த பாடலிலும் நம்முடைய பாவைக்கு
சாற்றி நீராடினால் என்கிறாள் கோதை

நமக்கு வேண்டிய பாக்கியங்களை
அளிப்பவள் பாவை

பாவங்களை போக்குபவள் பாவை
அவளை மலர்களிட்டு
வணங்குவதுமட்டுமல்லாமல்
பாமாலையும் சூட்டுகிறாள்.
அவள்மீதல்ல
அந்த அரங்கன் மீது.

அரங்கனின் புகழ் பாடுவதை
கேட்டு மகிழ்பவள் பாவை.

அதனால்தான் அகந்தையினால்
மகாபலி உலகிற்கு நன்மை செய்யும்
தேவர்களை அடிமைப்படுத்த நினைக்கும்போது
வாமன வடிவத்தில் அவதரித்து.
அவனிடம் மூன்றடி மண் யாசித்து
ஓரடியால் இவ்வுலகையும்,
ஈரடியால் விண்ணுலகையும்
மூன்றாவது அடிக்கு மகாபலியின் சிரசில்
தன்  திருப்பாதத்தை வைத்து பரம பக்தனான
அவனை  பாதாள உலகிற்கு அவனுக்கு
அனுக்ரஹம் செய்து அனுப்பி வைக்கிறான்
அந்த ஓங்கி உலகளந்த உத்தமன் .

அவன் வடிவம் ,அவன் சிந்தனை
 நம் மனதிலும் ஓங்கி வளர பக்தியுடன்
அனுதினமும் பிரார்த்தனை செய்வோம்.

ஒடுங்கி நின்ற பிரான்
ஓங்கி வளர்ந்த கதையை
இந்த பாசுரத்தில் நினைவுகூறி
போற்றுகிறாள்.கோதை நாச்சியார்

அப்படிப்பட்ட பெருமையுடைய
பிரானை நாம் போற்றி வணங்கினால்
மாதம்  மூன்று முறை தவறாது மழை பொழியும்.

 நீர் நிலைகள் நிறையும்.
 வயல்களில் செழுமையான செந்நிற
 நெற்  பயிர்கள் செழித்து வளரும்.

வயலில் தேங்கும் நீரில்
கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.



 கரிய பூங்குவளை மலர்களில்
பொறி வண்டுகள் தேனைக்
குடித்துவிட்டு உறங்கும்.

எங்கும் பசுமையாக இருப்பதால்
வயிறார பசும் புல்லை
நன்றாக உண்ட பசுக்கள்
மடி நிறைய பாலை குடம் குடமாக
வள்ளல் போல் வற்றாது வழங்கும்.

வீடுகளில் செல்வம்
மேன்மேலும் வளர்ந்து
என்றும் நீங்காது  தங்கும்
என்று ஆண்டாள் நாரணனை
வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகளை
பட்டியலிடுகிறாள் இந்த பாடலில்.

இந்த பாடலிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அம்பிகையின் அருளை பெற வேண்டுமென்றால் அரங்கனைப் போற்றி பாடினால் போதும் என்பதே. அவளே பூமகள், மலைமகள், நாமகள். அனைவரின்  அருளும் நமக்கு தட்டாது கிடைக்கும் என்பதே. 

இந்த பாசுரத்தை கேட்டு அனுபவிக்க தொடர்பை அனுப்பியவர்
திரு .பாஸ்கரன் சிவராமன்.-அவர்களுக்கு நன்றி.

https://www.youtube.com/watch?v=Ej3_I11Bbag&feature=youtu.be

6 comments:

  1. // அரங்கனைப் போற்றி பாடினால் போதும் என்பதே... // அருமை ஐயா.. உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Replies
    1. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதும் போல் வலையுலக பக்தர்களும் பாசுரங்களின் பொருளை உணர்ந்துகொள்ளும் அதே நேரத்தில் அந்த பாசுரத்தை செவிமடுக்க இன்பம் ரெட்டிப்பாகும். அதனால்தான் பாடலின் இணைப்பையும் இணைத்துள்ளேன். கேட்டு இன்புறுங்கள். பக்தியில் திளையுங்கள்.

      Delete
  3. அருமையான பாசுரம். அழகான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அரங்கனின் - நீங்கா நினைவுகளை - மறக்க இயலுமா? பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete