Wednesday, December 25, 2013

சீரடி சாய்

சீரடி சாய் 

அரிது அரிது
மானிடராய் பிறத்தல் அரிது

நாம் பண்ணிய புண்ணியங்களினால்
இறைவன் மனமுவந்து அளித்த
பரிசு மானிட பிறவி

கிடைத்தற்கரிய இந்த
மானிட பிறவியைக் கொண்டு
மீண்டும் இந்த உலகில் பிறந்து
துன்பப்படாதிருக்கும் வழியை
நாடி பெறவேண்டும்

பிறப்பும் இறப்பும் ஒரு
இடைவெளி இல்லா வளையம்

இந்த வளையத்திலிருந்து
வெளிவருவது மிக கடினம்.

உண்மையில் நாம் பிறப்பையும்
இறப்பையும் கடந்த ஆன்மா

அழியும் இந்த இந்த உடல் என்னும்
கூட்டில் சிக்கி கொண்டதால்
நாம் ஆன்மா என்பதை
மறந்துவிட்டோம்.

ஆன்மா அழியாது. என்றும்
அதன் சக்தி குறையாது.

ஆனால் அது பிறவிதோறும்
தாங்கும் உடல் அழியும்

அணுக்களால் இணைந்த இந்த
உடலில் ஜீவன் வெளியேறிய பின்
இந்த உடல் மீண்டும்
அணுக்களாக சிதறி போய்விடும்.

ஒவ்வொரு பிறவியிலும் நாம்
முற்பிறவிகளில் சேர்த்துக்கொண்ட
வினைகளோடு ஒவ்வொரு
பிறவிகளிலும் வினைகளை
அதிகரித்துகொண்டே போகிறோம்.

வினைகளின் சுமை கூட கூட
நாம் அஞ்ஞானத்தில் மூழ்கி போய்
நம்முடைய ஆன்ம ஸ்வரூபத்தை
அறவே மறந்து போகின்றோம்.

வினைகளை அனுபவிக்கவே
பிறவிகள் போதுவதில்லை.

நாம் செய்யும் செயல்கள்
நம்முடைய எண்ணங்களை பொறுத்து
 நல்லவைகளாகவோ அல்லது
தீயவைகளாகவோ அமைகின்றன

இந்து சுழலிலிருந்து நாம்
விடுபடாவிட்டால்
நம் பிறவிகளுக்கு
முடிவே இல்லை

இறைவன் நமக்கு பல கோடி
இன்பங்களை நாம் கேளாமலே
அளித்திருக்கிறான்.

அவைகளை
அனுபவிப்பதில் தவறில்லை

ஆனால் அதற்காகத்தான் பிறவி என்று
நினைத்தோமானால் அது தவறு

அது நமக்கு எண்ணற்ற
தொல்லைகளுடன் முடிவில்லாப்
பிறவிகளைத்தான் தரும்

ஏனென்றால் இவ்வுலக
இன்பங்கள் நிலையற்றவை

ஒரு மரணம் அனைத்திற்கும்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்

இந்த உடல் நோயுற்றால் உடல் மூலம்
பெரும் இன்பங்கள் அனைத்தும்
நின்றுவிடும்

மனம் உடைந்தால் நாம் இதுவரை
பெற்ற இன்பங்கள் அனைத்தும்
அணை உடைந்தால்  வெளியேறும் நீர் போல்
அனைத்தும் வெளியேறிவிடும்

இந்த உலகத்திற்கு நாம் வருவதன்
முக்கிய நோக்கம் நம்மை
படைத்தவனை அறிந்துகொள்வதே.

நம்மை படைத்த இறைவன்
நம் இதயத்திலே நம்மோடு
எப்போதும் இருக்கிறான்.

அவனை தேடி நாம் எங்கும்
செல்ல வேண்டியதில்லை.

ஆனால் நம் மனம்
அவனை நாடுவதே இல்லை
அது ஏன்?

ஏனென்றால் மனதிற்கு
இறைவனை உணரும் சக்தி
கிடையாது

மனம் என்பது உலக
சிந்தனைகளால் நிரப்பட்டது
அதில் உள்ள உலக சிந்தனைகளை
இறை சிந்தனைகளால்
அகற்றுதல் வேண்டும்.

நம்மால் அதைச்
செய்ய முடியாது

அதை செய்ய இறை சக்தி படைத்த
ஒருவரிடம் நம் மனதை
ஒப்படைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மகான்களில்
ஒருவர் சீரடி சாயிநாத்

அவர் இந்த உடலை உகுத்தாலும்
அவரை அன்போடு நினைத்து
பொறுமையோடு அவர் அருளை
 யாசிப்பவர்களுக்கு
இன்றும் தன்  அருளை
வாரி வாரி பொழிகிறார்.

அவர் பாதங்களை சரணடைவோம்
அவர் நாமத்தை சொல்லுவோம்.



துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்வை
இன்பங்கள் நிறைந்த
ஆனந்த வாழ்க்கையாக்குவோம்.

ஓம் சாய் ராம்  

4 comments:

  1. //துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்வை இன்பங்கள் நிறைந்த ஆனந்த வாழ்க்கையாக்குவோம்.//

    ததாஸ்து. அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete