Tuesday, March 4, 2014

உறக்கம் தேவையா?

உறக்கம் தேவையா?

ஆம் உறக்கம் தேவைதான்

ஆனால் எப்போது உறங்கவேண்டும்.
எவ்வளவு நேரம் உறங்கவேண்டும்
என்பது நாம் வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட
இலக்கைப்  பொறுத்தது


இந்த உலகில் பிறப்பதற்கு
முன் நமக்கு உறக்கம் கிடையாது.

காற்றாய் ,பேயாய்
அலைந்து திரிந்துகொண்டிருந்தோம்.
முற்பிறவிகளில் நிறைவேறாத  ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு மனித உடலைத் தேடி



மனித உடல் கிடைத்தவுடன் அது தயாராகி
இந்த உலகில் பிறந்து அது சுயமாக சிந்தித்து
எந்த நோக்கத்திற்காக இந்த பிறவி கிடைத்தது
என்பதை உணரவே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது.



அதனால்தான் பிறந்தவுடன் குழந்தை
பல மணி நேரம் ஒவ்வொரு நாளும் தூங்குகிறது.
வயது ஆக ஆக அதன் தூக்கம் குறைந்துகொண்டே வருகிறது.

வாழ்வில் கடமைகளும், ஆசைகளும்
மனிதனை தூங்க விடாமல் செய்கின்றன.


அப்படியும் பலர் தூங்கியே
கும்பகர்ணன்போல் தங்கள்
வாழ்வை வீணடிக்கிறார்கள்.

ஆசைகளை நிறைவேற்றதுடிப்பவன்
தூங்க மாட்டான்.


அதனால்தான் விழித்துக்  கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்.

குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார்
என்று ஒரு கவிஞன் பாடினான்

அதே நேரத்தில் ஆன்மீகத்தில்
முன்னேற   நினைப்பவனும் தூங்கமாட்டான்

அவனுக்கு தெரியும் தூங்கினால்
எமன் உயிரைக் கொண்டு போய்விடுவான் என்று



அதனால்தான் மார்கழி மாதம் முழுவதும்
ஆண்டாள் அனைவரையும் உறக்கத்தை
விட்டொழித்து பகவானை சிந்தித்து வணங்கி
உய்வடையுமாறு ஒவ்வொரு ஆண்டும்
நம்மையெல்லாம் வேண்டுகிறாள்

வள்ளலாரோ பசித்திரு ,தவித்திரு ,
விழித்திரு  என்றார்



விழித்திருந்தால்தான் உறக்கத்திலிருந்தும் ,
அதன் தொடர்ச்சியாக வரும் கனவுகளிலிருந்தும்
இன்ப துன்பங்களையும் கடந்து
நாம் விடுதலை பெறமுடியும்.

இந்த உடலில் உயிர் இருக்கும்போதுதான்
உயிர் மீண்டும் பிறவாமை என்னும் பேற்றை
பெற்று நிலையான இன்பத்தை அடையமுடியும். 

3 comments:

  1. பாடல்களுடன் விளக்கம் அருமை ஐயா...

    /// பிறவாமை என்னும் பேற்றை
    பெற்று நிலையான இன்பத்தை அடையமுடியும். /// - திருநாவுக்கரசரை தவிர...

    ReplyDelete
  2. ஐயா... உங்கள் தளம் .in என்று முடிவதால் இன்றைய பதிவு உங்களுக்கு உதவக் கூடும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    ReplyDelete
  3. உறக்கம் தேவைதான். தேவையான அளவு மட்டும்! :))

    ReplyDelete